எனது கண் முன்னிலையிலேயே கணவரை யானை அடித்து கொன்றது : மனைவி சாட்சியம்

எனது கண் முன்னிலையிலேயே குனிந்த படி நின்ற எனது கணவரை தும்பிக்கையினால் தூக்கி மரத்தில் அவரின் தலையை அடித்துக் கொன்றது.
இவ்வாறு வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள பலாச்சோலை என்னும் இடத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமான நடராசா என்பவரின் மரண விசாரனையில் சாட்சியம் அளித்த மனைவியான பரமேஸ்வரி கூறினார்.


மண்டூர் திடீர் மரணவிசாரணை அதிகாரி காராள சிங்கத்தினால் நடத்தப்பட்ட மரணவிசாரணையில் சாட்சியமான பரமேஸ்வரி மேலும் கூறியதாவது
நாங்கள் 1988 ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஓர் ஆண் மகன் இருக்கிறார்.

வேலை வாய்ப்புக்காக அவர் சவூதிக்குச் சென்றுள்ளார் சம்பவத்தினம் அதிகாலை கணவர் வேளாண்மை அறுவடை செய்வதற்காக வயலுக்கு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் ஊருக்குள் யானை வந்து விட்டதாக செய்தி பரவியது. இச்செய்தி கிடைத்ததும் கணவரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். யானையை விரட்ட தீமூட்டுவோம் என்று என்னிடம் கூறிய அவர் ஓலையை எடுத்துக்கொண்டு குனிந்து நின்றார்.

அப்போது திடீர் என என்னை கடந்து சென்ற யானை அவரை தூக்கி மரத்தில் அடித்து கொன்றது என தெரிவித்தார். இறந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

வைத்தியர் திருமதி. மஞ்ச நாயக்கவினால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. விபத்து மரணம் என்று மரண விசாரணை அதிகாரி த.காராள சிங்கம் தீர்ப்பு கூறினார்.