மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மாபெரும் வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள்!

(சுழற்சி நிருபர்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் மாபெரும் வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.

யானை மற்றும் பறவை விலங்குகளின் சாகசம், சிறார்களைச் சுமக்கும் புகையிரதம், குதிரை கோவேறு கழுதைச் சவாரி, ராட்டினங்கள், சாகச நிகழ்வுகள், முச்சக்கர ஹெலிகொப்டர் பறப்பு, மாயாஜால வித்தைகள், நெருப்பு விளையாட்டு, கைப்பணிக் கண்காட்சி, பாரம்பரிய கலாச்hர உணவுகள் உள்ளிட்ட 16 வகையான நிகழ்வுகள் இந்த கார்னிவெல் ஏற்பாட்டில் இடம்பெறும்  என்று பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மன்றேசா தியான இல்ல வீதி, பிள்ளையாரடியில் அமைந்துள்ள வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் நிகழ்வுகள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9.30 மணிவரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா பணிப்பாளர் சபையின் விஷேட கூட்டம் அதன் பணிப்பாளர் அடிகளார் போல் சற்குணநாயகம் தலைமையில் இடம்பெற்றபோது இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதன்போது சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் முதன் முறையாக கிழக்கு மாகாண சிறுவர்கள் கண்டு களிக்கும் வண்ணம் இந்த வேடிக்கை விநோத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பணிப்பாளர் சபை அமர்வில் வைத்திய கலாநிதி கே. ஈ. கருணாகரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ. சொர்ணலிங்கம், ரீ. நகுலேஸ்வரன், ஆர்.எஸ். கமலநாததீபன், ஆர். ராஜேஸ் கந்தையா,  கே. அரியரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.