வந்தாறுமூலையில் நாகர் வாழ்ந்துள்ளமைக்கான கல்வெட்டு சாசனம் கண்டுபிடிப்பு!

( நித்தி) மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்திற்கு மேற்கே நான்கு கிலோமீற்றார் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையாரடி ஆலயத்தில் இற்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முற்ப்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன் ஒருசமயம் குறித்த ஆலயத்திற்கு சென்றிருந்த வேளையில் ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ்பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டியபோது கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேராசிரியர் சி.பத்மநாதன், வ.குணபாலசிங்கம், எஸ்.சுபாஸ்கரானந்தம் மற்றும் கிழக்கு பல்கழைக்கழக வரலாற்றுத்துறை மாணவன் தனராஜான் ஆகியோர் ஆய்வுக்காக சென்றிருந்தனர்.
கல்வெட்டிலுள்ள விடயங்களை ஆய்வு செய்வதற்காக கல்வெட்டு படி எடுக்கப்பட்டு பேராசிரியர் அவர்களால் கல்வெட்டில் எழுதப்பட்ட விடயங்கள் வாசிக்கப்பட்டது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பற்றி பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகையில்
இற்றைக்கு 2000ம் ஆண்டுக்கு முற்ப்பட்ட தமிழ் பிராமிக் எழுத்து வகை சாசனம் என்றும் இச்சாசனத்தில் 'வேள் நாகன்' எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இங்கு வேள்  நாகன் எனும் நாமம் ஆனது 'குறு நில' மன்னர்களை குறிப்பிடுகின்றது என்றும், இவர்கள் பேசிய மொழி தமிழ் எனவும்; குறிப்பிட்டதோடு
இற்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன் மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு பல சாசனங்கள் கடந்த கால கட்டங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றுள் இச்சாசனமும் ஒன்றாகுமென தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சத்தில் பூர்வீக குடிகளாக இயக்கர் நாகர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எனவே மட்டக்களப்பு பிரதேசத்தில் பல இடங்களில் நாகர் வாழ்ந்துள்ளனர் என்பதனை இச்சாசனமும் சான்று பகர்கின்றது.
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினை வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ்பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்கள் அமர்ந்திருந்து ஆராட்சியில் ஈடுபடுவதையும் கல்வெட்டினையும் படங்களில் காணலாம்.