'எனது மகளின் இழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும்'


(எம்.எஸ்.எம்.நூர்தீன், வரதன்  ) குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டுக்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த யுவதியின் தாய், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.


 மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (வயது 22) என்ற யுவதி, கடந்த 28.2.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.3.2015 அன்று மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த யுவதியின் தாய் சோமசுந்தரம் கீதா என்பவர், குவைத் நாட்டுக்கு தனது மகளை சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதன்கிழமை (01) மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக தாய் சோமசுந்தரம் கீதா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவர்  பல தடவை எமது வீட்டுக்கு வந்து குவைத் நாட்டில் நல்ல வீட்டு வேலை இருப்பதாகவும் கூடிய சம்பளம் கிடைக்குமெனவும் பொய் சொல்லி எனது மகளை குவைத் நாட்டுக்கு அனுப்பினார்.

இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும் இவருக்கு வெளிநாடு செல்வதற்கான காப்புறுதி செலுத்தாமலும் குறித்த உப முகவர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக வீட்டு வேலைக்கான விசா இல்லாமல், விஸிட் எனப்படும் விசா மூலம் சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்.

உயிரிழந்த எனது மகளின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு  சென்று இது தொடர்பாக அறிய முற்பட்ட போதுதான், சட்ட பூர்வமற்ற முறையில் எந்த பதிவுகளுமின்றி எனது மகளை குவைத் நாட்டுக்கு அனுப்பியிருந்தமை தெரியவந்தது.

எனது மகளின் சடலத்துக்கு மேலே வைக்கப்பட்டவாறு மகளின் கடவுச்சீட்டு மாத்திரமே வந்தது. மகள் உயரமான மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக, மரணத்திற்கான காரணம் எழுதப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரை கொலை செய்துள்ளார் என்று நினைக்கின்றேன்.

எனது மகளின் மரணம் தொடர்பில் எந்தவொரு நஷ்டஈடும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஒரு ரூபாய் பணம் கூட குவைத்திலிருந்தோ அல்லது அனுப்பிய முகவரிடமிருந்தோ கிடைக்கவில்லை. எனது மகளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையுண்டு. அவரின்  கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது கணவரும் யுத்தத்தினால் இறந்து விட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

குடும்ப கஷ்டத்தின் காரணமாகவும் எனது மகளின் குழந்தையை வளர்தெடுக்க வேண்டும் என்பதற்காகவுமே அவர் குவைத்துக்கு சென்றார். எனவே எனது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு எனது மகளை குவைத் நாட்டுக்கு சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய  காத்தான்குடியைச் சேர்ந்த உபமுகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறான முறையில் வறிய பெண்களை சட்ட பூர்வமற்ற வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்