சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

( நித்தி ,மதன்) கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த மூன்றாம், நான்காம் வருட  மாணவர்கள், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்நிறுவக நுழைவாயிலுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மூன்றாம் வருட மாணவர்களின் கல்விச் சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதுடன்,  அது தொடர்பில் நிர்வாகிகள் எவரும் பொறுப்புடன் நடந்துகொள்வதில்லை.
நிறுவகத்தில் பாதுகாப்பு அலுவலர்களாக உள்ளவர்கள் தங்களது தொழில் கடமைகளை மீறி, மாணவர்களிடம் அதிகாரத்தை பிரயோகிக்கின்றனர். நிறுவகத்தின் இராஜதுரை அரங்கானது பரீட்சைக் காலத்தில் வெளிநிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதால், மாணவர்கள்  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
அரையாண்டு பரீட்சைக்கான நேர அட்டவணைப்படி உரிய நேரத்துக்கு பரீட்சையை நடத்தாது  பிற்போடுவதுடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் பிரச்சினைகள் தொடர்பில்; நிர்வாகத்தின் கவனத்துக்கு கடந்த காலத்தில் கொண்டு செல்லப்பட்டபோதிலும், இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் மாணவர்கள்  கூறினர்.

கவனயீர்ப்பு போராட்ட இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய  மகஜரையும்  சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக நிர்வாகத்திடம் மாணவர்கள் கையளித்தனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுடன்  கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியமும் இணைந்துகொண்டது.  'இது பல்கலைக்கழகமா? பள்ளிக்கூடமா', 'எங்கே? எங்கே? சுற்றுலாவுக்கான நிதி எங்கே', 'போராட்டம் இது போராட்டம் எமது உரிமைக்கான போராட்டம்', 'யாருக்கு, யாருக்கு இராஜதுரை அரங்கு யாருக்கு' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை  போராட்டத்தில் மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.