மட்டக்களப்பு மாணவியொருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வதந்தியையடுத்து பதற்ற நிலை

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் மாணவியொருவர் இன்று செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வதந்தியையடுத்து குறித்த பாடசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
 மட்டக்களப்பு நகரிலுள்ள பெண்கள் பாடசாலையான மட்டு. புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவியொருவர் இன்று செவ்வாயக்கிழமை காலை பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார்.

பின்னர் அம்மாணவி தனது பாடசாலைப் பையை தனது வகுப்பில் வைத்து விட்டு பனிஸ் வாங்கி வருவதாக கூறி வெளியில் சென்றுள்ளார்.


வெளியில் சென்ற மாணவி மீண்டும் பாடசாலைக்கு வரவில்லை. ஒரு சில மணி நேரம் கடந்த நிலையில் குறித்த மாணவியும் அந்த மாணவியின் தாயும் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
மீண்டும் தனது தாயுடன் பாடலைக்கு சென்ற மாணவி தான் பாடசாலைக்கு காலையில் வந்து வெளியில் பனிஸ் வாங்கச் சென்ற போது தன்னை வெள்ளை வேனில் வந்த சிலர் கடத்திச் சென்றதாகவும் தனது வாயை கட்டிக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் அந்த வானில் மட்டக்களப்பு நகரிலுள்ள இன்னுமொரு பெண்கள் பாடசாலை மாணவியொருவர் இருந்ததாகவும் தானும் அம்மாணவியும் அந்த கடத்தல் காரர்களிடமிருந்து தப்பித்து நேராக பாடாலைக்கு வந்தாகவும் அந்த நேரம் பாடசாலையின் வெளி நுழைவாயில் மூடப்பட்டிருந்தாகவும் அதனால் தான் நேரடியாக வீட்டுக்குச் சென்று தனது தாயிடம் முறையிட்டதாகவும் குறித்த மாணவி பாடசாலை அதிபரிடத்தில் முறையிட்டுள்ளார்.

பின்னர் இந்த விவகாரம் மட்டக்களப்பு பொலிசாருக்கு சென்றதையடுத்து மட்டக்களப்பு பொலிசார் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் குறித்த பாடசாலைக்குச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனால் இந்த விடயம் முழுப்பாடசாலைக்கும் பரவியதையடுத்து பாடசாலையில் ஒரு அச்ச நிலை தோன்றியது.

குறித்த மாணவியை விசாரணை செய்த பொலிசார் இந்த மாணவி விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பொலிசாரிடம் தமது வாக்கு மூலத்தை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள இன்னுமொரு பாடசாலை மாணவியும் கடத்தப்பட்டதாக குறித்த மாணவி தெரிவித்த கருத்தையடுத்து அந்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு சென்று விசாரணை செய்த போதும் அவ்வாறு எதுவும் நடக்க வில்லை என பொலிசாரினால் அறிய முடிந்துள்ளது.

குறித்த மாணவியை ஆரம்பக்கட்ட விசாரணை செய்த மட்டக்களப்பு பொலிசார் குறித்த மாணவி ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறு தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி வதந்தியை பரப்பியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி மட்டக்களப்பு பொலிசார் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை செய்து வருகின்றனர்.