உலகை உலுக்கிய சிரியா நாட்டு குழந்தையின் இறப்பு

துருக்கி கடல்கரையில் 3 வயது சிறுவனது உடல் கரைஒதுங்கியது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களில் நெஞ்சை பிளக்கும் விதமாக உள்ளது.


லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். சட்டவிரோதமாக படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக செல்லப்படுகிறது. இத்தகைய படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவமும் அரங்கேறிவருகிறது. இவ்வாறு விபத்துக்குள்ளாகி இந்த ஆண்டு மட்டும் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்று ஐ.நா. சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சம்பவமும் அரங்கேறிவருகிறது.

இதற்கிடையே அகதிகளின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த ஐரோப்பிய யூனியன் நடவடைக்கை எடுத்து வருகிறது. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அகதிகள் உள்ளே நுழைய தடையை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் நுழைவதற்கு ஐரோப்பிய யூனியன் தடைசெய்து வரும்நிலையில் லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் அகதிகள் அங்கு செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கடலில் அலையோடு அலையாக ஆடும் சூழ்நிலையும் உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் கடுமையான சூழ்நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்கள் உயிரை விடும் நிலையும் நிலவுகிறது.

இந்நிலையில் துருக்கி நாட்டில் சுற்றுலா பகுதியில் உள்ள கடற்கரையில் 3 வயது சிறுவனின் சடலம் கரைஒதுங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படமானது வெளியாகி உலக முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சை பிளக்கும் விதமாகவும், கண்ணீரை வரச்செய்யும் விதமாக கொடூரமாக உள்ளது. துள்ளி குறுநடைபோடக்கூடிய பச்சிளம் பிஞ்சு, வாடிய முகத்துடன் சடலமாக கிடப்பதை வீரர் ஒருவர் தூக்கும் காட்சி வெளியாகிஉள்ளது.  உயிரிழந்த குழந்தையானது சிரியாவை சேர்ந்தது என்று தெரியவந்து உள்ளது. குழந்தை சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து உள்ளது. மிகவும் அழகான அந்த பிஞ்சின் வாழ்க்கையை தண்ணீரே போய்விட்டது.

சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில் இருந்த 12 பேர் உரிழந்தனர். படகில் இருந்த 3 வயது குழந்தையும் உயிரிழந்து, கரைஒதுங்கிஉள்ளது. குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மனிதாபிமானம் துடைத்தெரியபட்டது என்றும் ஒருபுகைப்படம் உலகை அமைதியடைய செய்தது என்ற டேக்குடன் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையையும் திருப்பி உள்ளது. புகைப்படத்தை பார்த்து அழும் சமூக வலைதள பயனாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.