மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு

(படுவான் பாலகன்) மகிழடித்தீவு  கண்ணகி அம்மன் ஆலயத்தில் 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையான நாகர் காலத்து பொருட்களான அம்மி, குழவி, ஓட்டுச்சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றது.

மேலும் நாகர்களது வேள்ணாகன், நாகன் மகன் கண்ணன்  போன்ற பட்டப்பெயர்களும் அதில் எழுதப்பட்டுள்ளது. என்பதை கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம், வேந்தர் யாழ்பல்கலைக்கழகம்) உறுதி செய்தார்.


இதில் கண்டெடுக்கப்பட்ட அம்மி குழவி ஆகிய இரண்டும் ஒன்றாக  முதன் முதலாக இங்குதான் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் முன் மண்டபத்தின் வாயிலில் உள்ள கற்களை ஆராய்ந்ததில் அவை தாந்தாமலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றிலும் நாகமன்னர்களது பெயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் பிற்காலத்தில் இருந்த வன்னிமைகளை போல நாகரின் சிற்றரசு இருந்தது. என்றும் அல்லது அவர்களது சிற்றரசு ஒன்றில் கொக்கட்டிச்சோலை அடங்கி இருந்தது என்றும் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.