சிங்கள மாணவர்களினால் நையப்புடைக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் கோரி ஆர்ப்பாட்டம் !

(சுபஜன்)
மட்டக்களப்பு  கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு விஞ்ஞான பீட மாணவன் கோபாலபிள்ளை பிரதாஸ்  கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் குறித்த நபர்களை கைது செய்யுமாறும் இது ஒரு இனவாதத்தை தூண்டுவதற்காக திட்டமிட்டு நடாத்தப்பட்ட செயல் என்றும் கூறி  இன்று (26) பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக  மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

குறித்த பல்கலைக்கழக மாணவன் கடந்த மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூறும் பொருட்டு முகப்புத்தகமொன்றில் மே 18 என்று வாசகமிட்ட ஒரு புகைப்படத்தை பதிவுசெய்ததன் காரணமாகவே பல சிங்கள மாணவர்களால் கடந்த (23) தாக்கப்பட்டிருந்தார்.

தாக்குதல் நடாத்திய நபரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடாத்திக் கொண்டிருந்த வேளையில் ஸ்தலத்திற்கு விரைந்த  மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர்களான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கௌரவ பா.உ சீனித்தம்பி யோகேஸ்வரன்  மாணவர்களுடன் இது தொடர்பில் உரையாடினர்.
இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கின்ற மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இது தொடர்பில் அடுத்த  பாராளுமன்ற அமர்வில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  உறுதியளித்தனர் இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு  மாணர்கள் கலைந்து சென்றனர்.