பேராசிரியர் செ.யோகராஜா அவர்களது பணி நயப்பு விழா

(படுவான் பாலகன்) கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் செ.யோகராஜா அவர்களது பணி நயப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் செ.யோகராஜா மணிவிழாச் சபைச் செயலாளர் ஆ.கி.பிரான்சிஸ் தெரிவித்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த செயலாளர் ஆ.கி.பிரான்சிஸ்,

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராஜா அவர்களின் பணி வாழ்வினை கௌரவிக்கும் வகையில் மட்டக்களப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள  விழாக் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நயப்பு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் கரணவாய் என்னும் ஊரில் பிறந்து மலையகத்தின் தலவாக்கலை நகரில் திருமண பந்தத்தால் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1991ஆம் ஆண்டு தொடக்கம் விரிவுரையாளராக இணைந்து கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக மட்டக்களப்பு நகரிலேயே வாழ்ந்து வருபவர் பேராசிரியர் செ.யோகராஜா அவர்கள்.

இவர், மட்டக்களப்பின் தமிழ் இலக்கிய முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பினை வழங்கியதுடன் அறியப்படாமல் இருந்த பழைய இலக்கிய முன்னோடிகளையும், அவர்களது இலக்கிய முயற்சிகளையும், உலகிற்கு அறிமுகப்படுத்தியும் உள்ளார்.

அவரது பணிகளை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் போது கருணை யோகன் என்னும் நினைவு மலரும் வெளியிடப்படவுள்ளது. அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள் எனப் பலதரப்பட்டோரிடமிருந்து ஆக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

எனவே இவ்விழா தொடர்பாக ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர் விழாக்குழுச் செயலாளர் ஆ.கி.பிரான்சிஸ், ஓய்வு நிலை ஆசிரியர், 0771838798, 84/7B, 9ஆம் குறுக்கு, இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு உடன் தொடர்பு கொள்ளலாம்.