கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் : 15 வருடங்களின் பின்னர் விசாரணை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பிலான வழக்கு 15 வருடங்களின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.


 இந்த வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தத் தாக்குதல் 2001ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24இல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில், இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, நிர்மல ரஞ்சன் அல்லது மசூர், விக்டர் அல்பிறட் டொமினிக், சுப்பிரமணியம் நவராஜசிங்கம், நாகேந்திரம் நகரத்தினம், தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 வரையான காலப்பகுதியில், விமான நிலைய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக அவர்களுக்கு எதிராக 311 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


ஏழு விமானப்படை வீரர்களை கொன்றதாகவும் 14 படையினரை காயப்படுத்தியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் விமானம், மூன்று K-8 விமானம், இரண்டு M1-17 ஹெலிகள் ஆகியன அழிக்கப்பட்டன. மேலும், எட்டு பெல் ஹெலிகள், 4 மிக் விமானங்கள், 6 கிபிர் விமானங்கள், 03 மிக் யுத்த விமானங்கள், 3FT விமானங்கள் என்பவற்றுக்குச் சேதம் ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டப்படுள்ளது.

இந்த வழக்கில், துப்பாக்கிகள் இரண்டு, ஆர்.பி.ஜிகள் இலக்கு வைத்துச் சுடும் ஒரு துப்பாக்கி உட்பட 244 சான்றுப் பொருட்களாக காட்டப்பட்டதுடன், 415 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். -