கடத்தலில் ஈடுபட்ட வேன் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு


அம்பாறை, தாண்டியடிக் கிராமத்திலிருந்து 03 பசுக்களை கடத்திச் சென்றுகொண்டிருந்த வான் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த வான் தாலிபோட்டா ஆற்றினுள் விழுந்துள்ளதுடன், அப்பசுக்களை கடத்தியோரும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 தாண்டியடிக் கிராமத்திலிருந்து வானொன்றில் 03 பசுக்களை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலர் கடத்திச்செல்வதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திருக்கோவில் பிரதான வீதியில் காவல் கடமையில் ஈடுபட்டனர்.

இப்பொலிஸாரைக் கண்ட கடத்தல்காரர்கள், சாகாமம் காட்டுப்பாதையூடாக சென்றுகொண்டிருந்தனர். இது தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் வானை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியுள்ளனர். இருப்பினும், குறித்த வான் சாரதி வானை நிறுத்தாது தப்பிச்செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த வான் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதில் வான் தாலிபோட்டா ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்நிலையில், வானையும் பசுக்களையும் கடத்தல்காரர்கள் அவ்விடத்தில் கைவிட்டு, தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.