அரச அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து தப்பிச் சென்ற விடுதலைப் புலி உறுப்பினர்கள்

யுத்தம் நிறைவடைந்த சில வாரங்களில் சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து வௌிநாடு தப்பிச் சென்றுள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், எனினும் அவ்வாறு சென்றவர்கள் காணாமல் போயுள்ளோர் பட்டியலில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவர்கள் குறித்தும் ஆராய வேண்டும் எனவும், அதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது குறித்த சட்டத்தில் இடமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகள் குறித்து வௌிநாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு தௌிவுபடுத்தும் நோக்கில், வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அலுவலகம் தொடர்பில் சிலர் மக்களுக்கு தவறான கருத்துக்களை கொண்டு செல்வதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்ட சில திருத்தங்களையும் அதில் உள்ளடக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அதற்கு நீதிமன்றத்துக்கான அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும் அதன் பரிந்துரைகள் இலங்கை சட்டத்தின் படியே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.