இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பழைய பஸ்களை திருத்தி மீள்பாவனைக்கு உட்படுத்த தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 500 பழைய பஸ்களை திருத்தி மீள்பாவனைக்கு உட்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்திய அரசின் நிதி உதவியுடன் ரயில் மற்றும் பஸ்களின் சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்தார்.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய சுமார் 500 பஸ்களுக்கான இயந்திர கட்டமைப்புகளையும் இந்தியாவிலிருந்து பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் நிலையத்திற்கும், பஸ் தரிப்பிடத்திற்கும் இடையிலான போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் ஊடாக ஒன்றிணைந்த போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.