யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு : பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், பொலிஸாரின் தவறும் அடங்கியிருக்கிறது எனக்கூறிய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அம்மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமளவுக்கு நிலைமை காணப்பட்டதா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் அவ்விடத்தில், கொள்ளையோ, திட்டமிடப்பட்ட ரீதியிலான தாக்குதலோ அல்லது மரண அச்சுறுத்தலோ காணப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, அச்சம்பவம் தொடர்பில் உடனடியாக அறிவிக்காமை, அங்கிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் செய்த தவறாகும் என்றும், இதுவோர் ஒழுக்கமீறல் சம்பவம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது என்றும், பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறை​வையொட்டி, அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25) கலந்துகொண்டு உரையாற்றும் போது, பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இச்சம்பவம், மிகவும் வருத்தத்துக்குரிய சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றவுடனேயே, நான் நடவடிக்கை எடுத்தேன்” என்றார்.  

“பொலிஸார், தமக்கான குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். அல்லது, அவ்விடத்துக்கு அவசியமான அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 53ஆவது உறுப்புரையின் கீழ், பொலிஸார், சந்தர்ப்பத்துக்கேற்ப குறைந்தபட்ச அல்லது அவசியமான அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் உள்ளதென்பதை வலியுறுத்தியுள்ளது” என்றார். தான், பொலிஸ் மா அதிபர் என்ற வகையில், மத்தியஸ்தமாகவும் சரியான விடயங்களையுமே தெரிவிப்பதாகக் கூறிய பூஜித் ஜயசுந்தர, தனிப்பட்ட கருத்துகளை வெளியிடும் போது, மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாகவும் கூறினார்.

இதன்போது, சுன்னாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் போது, பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் காயமடைந்தமை தொடர்பில், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர், பொலிஸ்மா அதிபரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள், தங்களுடைய சீருடையில் இருக்கவில்லை. அதனால், பொலிஸார் என்று தெரியாமலேயே, அவர்கள் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதென்றார்.

அவ்விடத்தில் இடம்பெற்ற மோதலின் போது, அந்த பொலிஸ் அதிகாரிகளும் தலை​யிட்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். இதன்போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள், அவர்களுடைய மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறிய பொலிஸ்மா அதிபர், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மேலும் கூறினார்.