துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம்

(ஜனார்த்தன்)
துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளரும், யாழ்ப்பாண மாவட்ட பதில் பணிப்பாளருமான நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை கண்டித்து அவரது சொந்தக் கிராமமான கிரான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை 26.02.2017 ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர்  ஞா. கிருஸ்ணப்பிள்ளை ஆகியோருட்பட சமூக நல விரும்பிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கெடுத்தனர்.
ஜனாதிபதி அவர்களே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் கண்டு கொள்ளப்படாமல் போகுமா ? நல்லாட்சி அரசு கொலைஞர்களைக் கண்டு பிடித்து நீதியின் முன்னிறுத்த வேண்டும், நேர்மைக்கு பரிசாக துப்பாக்கி ரவையா ? ஆகிய இன்னும் பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.