துப்பாக்கிச்சூடு சம்பவம் : இலக்கத்தகடு இன்றி பயணித்த இருவர் காத்தான்குடியில் கைது

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி குறிப்பிட்டார்.


சம்பவ தினத்தன்று, இலக்கத்தகடு இன்றி மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற இருவர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கும் இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று மூன்று நாட்கள் முழுமையாகக் கடந்துள்ள நிலையில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் விமல்ராஜ், நேற்றிரவு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்றும் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

விமல்ராஜ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றும், விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஏறாவூர் புன்னைக்குடா பகுதியில் அத்துமீறி காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர் தடுத்து நிறுத்தியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 22 ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.

அதே தினத்தில் இந்த துப்பாக்கிப் பிரயோகமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.