சிதைந்த குடும்பங்களினால் சிறகொடிந்த பிள்ளைகளின் அவலங்கள் (ஓர் சமூக பார்வை)

மனித வாழ்வில் ஓர் உயிரின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ச்சியான பிணைப்பாகவும், தொன்மையானதும், எப்போதும் தவிர்க்க முடியாததும், முக்கியமானதும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்கின்றதுமான ஒரு நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றதென்பது மறுதலிக்க முடியாத உண்மை. மற்றும் தனிமனித தேவைகளை பல்வேறு அமைப்புக்கள் பூர்த்தி செய்தாலும் கூடியளவில் மனித தேவைகளை நிறைவேற்றி, சீர்செய்து மனித வாழ்விற்கு ஒரு ஊன்றுகோலாகவும், இயக்க சக்தியாகவும் குடும்பமே காணப்படுகின்றதெனலாம்.

மனிதனுக்கு மனிதன் உதவி செய்து மகத்தான வாழ்வை வாழ வேண்டியது கட்டாயமும் கூட. காரணம் உயிர்கள் தனித்து வாழ முடியாது. இதனை நன்கறிந்த மனிதன் தனது உடல், உள மற்றும் சமூக தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக குடும்பமாகிறான். இதன் அமைப்பு இடத்துக்கிடம் வேறுபட்டதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது (sarantakos, 1993, 180).

குடும்பம் என்பதன் பொதுமையாக்கப்பட்ட வரைவிலக்கணத்தை எடுத்துக்கொண்டால் அது உலகளாவிய ரீதியில் காணப்படுவதுடன் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுடைய பண்பாட்டு கலாசார மற்றும் சமூக முறைப்படி திருமண வாழ்வில் ஈடுபடும் பொழுதே குடும்பம் எனும் அமைப்பு தோன்ற முடியும். அதனையே குடும்பமாகவும் சமூகத்தில் ஏற்றுக்கொள்கின்றனர். இவற்றினை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்றபோது சமூகக் கட்டமைப்பை சீராக பேணுகின்ற ஓர் தளமாக குடும்பம் காணப்படுவதையும் ஏனைய சமூகக் கூறுகளான சமயம், கல்வி, கலை, கலாசாரம், சமூக நிறுவனங்கள், பாடசாலை, அரசியல் போன்ற அனைத்து கூறுகளின் இயக்கத்திற்கும் குடும்பம் என்பது மிக அவசியமானதொன்றாகவும் இவையனைத்திலும் குடும்பமே முதன்மையானதாகவும் காணப்படுகின்றது.


அந்த வகையில் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட குடும்பமானது கருக்குடும்பம், கூட்டுக்குடும்பம், விரிந்தக் குடும்பம், ஒருத்துணை மணக் குடும்பம், பல மனைவிக் குடும்பம், பல கணவர் குடும்பம் என்று பல்வேறு வகைகளாக காணப்படுகின்றது. கருக்குடும்பம் என்பது உலகலாவிய ரீதியில் முக்கியமான ஒரு குடும்ப அமைப்பாக காணப்படுகின்றது. இது ஏனைய குடும்ப அமைப்புக்களையும் காட்டிலும் தனிப்பண்பு கொண்டது.

கூட்டுக்குடும்பம் என்பது ஒரே வீட்டில் உறைந்து, ஒருங்கே சமைத்து உண்டு கூட்டுச் சொத்து, பொதுவழிபாடு ஆகியவற்றைக் கொண்ட ஏதேனும் ஒரு வகையில் உறவினராகவுள்ள ஒரு குழுவே கூட்டுக் குடும்பமாகும். இதில் தாய், தந்தை, மாமா, மாமி, பாட்டி, தாத்தா, பிள்ளைகள், சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என பல்வேறு வகையான உறவுகளையும் கொண்டு காணப்படுகின்ற முறையை குறிக்கின்றது. 'பீல்சு' எனும் அறிஞர் குடும்பம் தொடர்பாக கூறும்போது 'இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்களை உள்ளடக்கியதுதான் கூட்டுக் குடும்பம்' என்கின்றார்.

விரிந்தக் குடும்பம் என்பது தனிக்குடும்ப உறுப்பினர்கள் தமக்கு மிக நெருக்கமான உறவினர்களுடன் இணைந்து வாழ முற்படும்போது விரிந்த குடும்பம் தோன்றுகின்றது. இவ்விரிந்த குடும்பமானது நேர்வழி உறவுகளைக் கொண்டு அமையுமானால் அது நேர்வழி விரிந்த குடும்பம் என்றும், கிளைவழி உறவினர்களையும் அவர்களைச் சேர்ந்த உறவுகளையும் கொண்டு அமையுமானால் அது கிளைவழி விரிந்த குடும்பம் என்றும், தந்தைவழி உறவுகளை மட்டும் கொண்டு அமைந்திருந்தால் அது தந்தைவழி விரிந்த குடும்பம் என்றும், தாய்வழி உறவுகளை மட்டும் கொண்டு அமைந்திருந்தால் அது தாய்வழி விரிந்த குடும்பம் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

அடுத்ததாக ஒருவன் ஒருத்தியை மணந்து அதன் மூலம் உருவாகும் குடும்பம் ஒருத்துணை மணக் குடும்பம் என்றும், ஒரு ஆண் பல பெண்களை மணந்து அதன் மூலம் உருவாகும் குடும்பம் பல மனைவிக் குடும்பம் என்றும், ஒரு பெண் பல ஆண்களை  மணந்து அதன் மூலம் உருவாகும் குடும்பம் பல கணவர் குடும்பம் என்றும் குடும்பங்களானது பல்வேறு வகைகளாக காணப்படுகின்றது. இவ்வாறாக குடும்பத்தின் தன்மை, வரையறைகள், வகைப்பாடுகள் என்பன காணப்பட்டு அது சமூக இயக்கத்தினது தேவைக்கு மிகவும் அவசியமானதொரு நிறுவனமாகவும் சமூகக்கூறாகவும் காணப்படுகின்றது (பக்தவக்சல பாரதி, 2003).

இவ்வாறு குடும்பத்தின் தேவையானது அன்றுதொட்டு இன்று வரையிலும் மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிர்களினதும் நாடி நரம்புகள் ஓய்வெடுக்கும் காலம் வரையும் அவசியமானதாக காணப்படுகின்றது. அவ்வாறாக காணப்படுகின்ற குடும்பங்களின் சிதைவால் அதிகமாக பாதிக்கப்படுவது யார்? என்ற வினாவிற்கு விடைகாண எத்தணிக்கின்றபோது பிள்ளைகளே என்பது மறுக்கமுடியாத உண்மையாக உள்ளது. குடும்ப பிரச்சினைகள், பிரிவுகள், முறையற்ற திருமணம், மறுமணம், போன்ற இன்னோரன்ன காரணிகளால் சிதறடிக்கப்படுகின்ற, சிதைக்கப்படுகின்ற, சின்னாபின்னமாக்கப்படுகின்ற குடும்பங்களில் வாழ்கின்ற பிள்ளைகளின் அவலநிலை காண்போரை கலங்கிட வைக்குமளவிற்கு கவலைக்கிடமாக மாறுகின்ற சம்பவங்களை எம் கண்கூடாக காணக்கூடியதாகவுள்ளது.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பது மூத்தோர் வாக்கு. அந்தவகையில் சிறுவர்கள் என்றால் யார்? அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் எவை? அவர்கள் நாட்டிற்கு எவ்வளவு முக்கியமானவர்கள்? என சிந்திக்க வேண்டியது அவசியம். ஐக்கிய  நாடுகள் சபை பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு சிறுவர்கள் என்போர் யார் என்பது தொடர்பில் வரைவிலக்கணம் ஒன்றை முன்வைத்துள்ளது. இதன்படி '18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்று கூறப்படுகின்றது'. இலங்கை அரசும் 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இப்பட்டயத்தை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது (Unicef Report,2007).

ஆயினும் பெற்றோரின் கவனயீனத்தால் எத்தனையோ பிள்ளைகள் இன்று அநாதைகளாக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு உயிரை விட்டிருக்கின்றனர். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது பெற்றோரால், பாதுகாவலரால் அல்லது அவர்களுடன் வாழும் நெருங்கிய உறவினரால் ஒரு பிள்ளையின் உடல், உள ரீதியான ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் வகையில் ஒரு செயலை செய்தல் அல்லது செய்யாமையாகும். அதாவது இம்சைப்படுத்தல், சகலவிதமான உடலியல், மனவெழுச்சி துன்புறுத்தல் வகை, பாலியல் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, வியாபார சுரண்டல்களினால் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் அல்லது விளைவிக்கக் கூடிய செயல்கள் தொடர்ந்து இடம்பெறுமாயின் அது சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படும் (குணரெட்ணம் வேலுப்பிள்ளை, 2009, 513).
இது உடல் ரீதியான துஷ்பிரயோகம், உளரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் என மூன்று வகைகளில் காணப்படுகின்றது. உடல் ரீதியான துஷ்பிபிரயோகம் என்பது உடல் ரீதியான தாக்குதலால் ஏற்படுத்தலாகும். உதாரணம் அடித்தல், அறைதல், தள்ளுதல், உதைத்தல், கிள்ளுதல், கடித்தல், மூச்சித் திணற வைத்தல், சிகரெட்டினால் சுடுதல், சூடான பொருட்களை ஊற்றல், போன்ற கடுமையான உடல் ரீதியான தண்டனைகள் இதிலடங்குகின்றன. மேற்குலக நாடுகளில் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்ற வண்ணமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

மற்றவர் தமது நடத்தையின் மூலம் ஒரு செயலைச் செய்யாததன் விளைவாக பிள்ளையின் உள ஆரோக்கியத்தினை பாதிக்கும்; சமூக வளர்ச்சியில் தலையிடுவது உளரீதியான துஷ்பிரயோகமாகும். எடுத்துக்காட்டாக புறக்கணித்தல், பாசத்தைக் குறைத்தல், பிள்ளைகளை பயமுறுத்தல், மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவமானப்படுத்தல், கடுமையான தண்டனைக் கொடுத்தல், வேலைக்கமர்த்துதல், கடத்தல் போன்றவற்றை கூறலாம். பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் எனும்போது சிறுவனோ அல்லது சிறுமியோ முழுதாகப் புரிந்துக்கொள்ள முடியாத அல்லது விருப்பத்தைக் கூறமுடியாத பாலியல் நடவடிக்கைகளால் அவர்களை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகும்.

நாட்டின் பெறுமதி மிக்க சொத்து அந்நாட்டின் சிறுவர் சமுதாயமாகும். இச்சிறுவர்களுக்கு ஈவு இரக்கமின்றி செய்யப்படும் உடல், உள மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை தடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. பொருளாதார ரீதியான சுரண்டலிலிருந்தும், ஆபத்தான தொழிற் புரிதலிலிருந்தும் உடல், உள மற்றும் பாலியல் ரீதியாக இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்ட ஏற்பாடுகள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ஆனபோதும் சிறுவர்கள் தொடர்பான உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. காண்போரின் கண்களை கலங்கிட வைக்கும் அளவிற்கு இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர் தொடர்பான உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான விடயங்கள் இடம்பெற்று சிறார்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய பெற்றோரே/ பாதுகாவலரே பிள்ளைகளின் உயிருக்கு உலைவைத்து விடுகின்ற சம்பவங்கள் உலகையே உலுக்கியெடுத்து மறுபுறம் போட்டுவிடுகின்றது.

இதற்கு காரணம் சட்ட ஏற்பாடுகளின் முக்கியத்துவத்தினையும் உயிரின் மதிப்பினையும் அறியாத சமூகத்தின் அறியாமையும் அசட்டுத்தனமான செல்செறி நிலைமையுமேயாகும்.

சிறுவர் உரிமைகள் தொடர்பாகக் கூறும் முதற் பிரகடணம் 1924ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாயினும் 1959ம் ஆண்டில் ஐ.நா. சபையினால் வெளியிடப்பட்ட பிரகடனமே சிறுவர் உரிமைத் தொடர்பாகவும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் எடுத்துக் கூறுகின்றது. இவ்வாறாக கூறப்பட்ட சட்ட ஏற்பாடுகளாக, 1956ம் ஆண்டின் 47ம் இலக்க பெண்கள், இளவயதினர், சிறுவர்களை வேலைக்கமர்த்தல் தொடர்பான சட்டம், 1954ம் ஆண்டின் 19ம் இலக்க கடைக் காரியாலய ஊழியர் சட்டம், 1942ம் ஆண்டின் 45ம் இலக்க தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டம், 1927ம் ஆண்டின் 27ம் இலக்க கீழ் எல்லைச் சம்பள கட்டளைச் சட்டம், தண்டனை சட்டக் கோவை, இலங்கை சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை சட்டம் போன்ற சட்ட ஏற்பாடுகள் இயற்றப்பட்டு சிறுவர் தொடர்பான உரிமைகளுக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமளிக்கப்படுகின்றது.
மேலும் சிறுவர்கள் இனம், சாதி, பால், பண்பாடு, நிறம், வர்க்கம், குடிபிறப்பு, அந்தஸ்த்து, பூர்வீகம், உடல் நிலை முதலியவற்றால் ஓரங்கட்டப்படாது சமமான வகையில் பார்க்கப்பட வேண்டும் என்றும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய அன்பு, அக்கறை, பாதுகாப்பு என்பன பெற்றோர், உறவினர், பாதுகாவலரால் கொடுக்கப்பட வேண்டும் என்றும் சிறுவர்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகளில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பிள்ளைகள் சுயமாக இயங்கவும், சுதந்திரமாக செயற்படவும் பெற்றோர் சிறந்த வழிகாட்டியாக அமையவேண்டும் என்பதும் பிள்ளைகள் பற்றி முடிவுகளை எடுக்கும்போது பிள்ளைகளின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குரியதாகும்.

எனவே ஏட்டுச் சட்டங்கள் ஏட்டிலே தங்கி விடாமல் ஏறிட்டு புறப்பட்டு காத்திரமாக செயற்பட வேண்டும் என்பது உயிரின் மதிப்பினை நன்கறிந்த மனிதர்கள், சமூக ஆர்வலர்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது. சட்டங்கள் செம்மைபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்போது பிள்ளைகளின் உரிமை மீறல்களுக்கு நியாயம் கிடைப்பதுடன் சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய நன்னடத்தை, உயர் மனப்பாங்கு போன்ற சிறந்த குணங்களைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும்.                  
                             
 இராமலிங்கம் தயாணி.