மனக்காயங்களுக்கு மருந்தாக அமையும் ஆன்மிகப் பெரியோர்களின் அருள்மொழிகள்!

அவசர அவசரமான வாழ்க்கை முறையில் நிறையவே போராட வேண்டியதிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள். போதாக்குறைக்கு உறவுகளைப் பராமரிப்பதிலும் சின்னச்சின்ன பிணக்குகள், தர்மசங்கடங்கள் என ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்குப் பெரிதும் துணை நிற்பவை நமது ஆன்மிகப் பெரியோர்கள் நமக்குக் கூறிச்சென்ற பொன்மொழிகள்தான். அவை நமது காயங்களுக்கு மருந்தாகவும், மனதுக்கு ஆறுதலாகவும் இருப்பவை. இங்கே சில ஆன்மிக அருள்மொழிகள்...


* நமது வாழ்வில் ஏற்படும் இன்னல்களும் கடும் சோதனைகளும் இறைவன் நமக்கு வைக்கும் பரீட்சைகள் ஆகும். அவற்றை ஒருவர் சரியான மனப்பாங்கோடு சந்தித்து, அவர் அவற்றைக் கடந்தால், முன்னைவிட வலிமையானவராக விளங்குவார்.
- ஶ்ரீ அரவிந்தர்.


* வாழ்க்கையில் ஒரு பொருளுக்கு மதிப்பு, சொத்தாலோ சுகத்தாலோ அல்ல. நமக்குப் படிப்பினை தர வருகின்ற அனுபவத்தைத் தவிர, வேறு எதிலும் மதிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இயற்கையின் இனிய அணைப்பை விட, நம் மீது விழும் அடிகளே நமக்குப் பலவேளைகளிலும் சிறந்த பாடத்தைக் கற்பிக்கின்றன.
-ஶ்ரீ கிருஷ்ணர்.

* கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது, 'எனக்கு இது வேண்டும்.... அது வேண்டும் ...' எனக் கேட்காமல் , 'எனக்கு எது நல்லதோ அதைக் கொடு' எனக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம்மைவிட நமக்கு எது நல்லது என்று அவருக்குத்தான் தெரியும்!
- ஶ்ரீ அன்னை.



* மனிதர்களுடைய பாராட்டை ஒரு போதும் எதிர்பார்க்காதே. ஏனென்றால், எந்த அடிப்படையில் ஒன்றைப் பாராட்ட வேண்டும் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்களைவிட உயர்ந்த ஒன்றைக் காணும்போது அவர்கள் அதை விரும்புவதும் இல்லை. பலம் பெறுவதற்காகவே, நீ பிறருடைய பாராட்டை எதிர்பார்க்கிறாய். அந்த வழியில் நீ ஒரு போதும் பலம் பெறமாட்டாய். உண்மையில் உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளேயே இருக்கிறது.
-ஶ்ரீ அன்னை.

* பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள். பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது. வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.
- வள்ளலார்.



* பக்தனே! பல்வேறு நல்வினைகளைச் செய்ததன் பலனாக நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய்.நல்லவிதமாக நடந்துகொள். நீ வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறாய். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்கவேண்டும்.உலகில் எங்கு சென்றாலும் நான் உன்னுடன் இருப்பேன். உன் இதயத்திலும் அனைத்து உயிரினங்களின் இதயங்களிலும் நான் இருப்பேன்.
- ஶ்ரீ ஷீரடி பாபா.

* பணம் இருந்தால், அகங்காரமும் கூடவே வரும். அகங்காரம் இருந்தால், ஆண்டவன் வர மாட்டான். அகங்காரத்தை அழிக்க வேண்டுமானால், பணத்தின் மீதிருக்கும் பற்றை நீக்க வேண்டும்.
- ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

* எதுவரை நம்மிடம் ஆசைகள் இருக்குமோ, அதுவரை அவற்றால் உண்டாகக் கூடிய துன்பம், கவலை, அமைதியின்மை ஆகியவையும் கூடவே இருக்கும். நம்பிக்கையினால் அற்புதங்கள்கூட நிகழும். ஆனால், தற்பெருமையும் கர்வமும் அழிவைத்தான் தரும்.
- ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.




* நீ இல்லறத்தானாக வாழ விரும்பினால், இந்தப் பறவைகளைப் போல் எந்த விநாடியும் பிறருக்காக உன்னைத் தியாகம் செய்யத் தயாராக வாழவேண்டும். உலகைத் துறந்து வாழ விரும்பினால், மிக அழகான பெண்ணையும், பணத்தையும், பதவியையும் ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது.
-ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.


* சுற்றியுள்ள கயிற்றை அவிழ்ப்பதற்கு ஒரு வழிதான் உண்டு. எப்படிச் சுற்றினோமோ அப்படியே மறுபடியும் திருப்பி அவிழ்க்க வேண்டும். அதைப்போலவே தவறான செயல்களை நற்செயல்களினாலும், பாவங்களைப் புண்ணியங்களினாலும் போக்கிக் கொள்ளவேண்டும். தானம், கடமை புரிதல், இறைவன் திருப்பெயரை உச்சரித்தல், ஆலய தரிசனம் ஆகிய நற்செயல்கள் பாவம் தொலைக்கும் வழிகளாகும்.
- மகா பெரியவா.


* வறண்டிருந்த நிலப்பகுதியானாலும், அதை மனமார ஏற்றால், வளமாக்க முடியும். கடவுளுக்கு எதிரில் எவரும் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் இல்லை. தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பவன், அந்தக் கணமே மன்னிக்கப்பட வேண்டும்.
- ஶ்ரீ ராகவேந்திரர்.


* எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடு, சரணாகதி ஆவதுதான் உன் வேலை. உண்மையில் பரிபூரணமாக சரணாகதி ஆகி விட்டால், அதன் பின்னர், 'குரு இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை' என்று புகார் சொல்வதற்கு இடமே இல்லை. நான்தான் செய்கிறேனே, நீ என்னிடம் சரணாகதி அடைந்துவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதானே.
-ஶ்ரீ ரமண மகரிஷி.