(செங்கலடி நிருபர்)
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள பாடசாலை மஞ்சள் கடவையில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை 22.06.2017 காலை 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்குச் (CBS) சொந்தமான இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மட்டக்களப்பு தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடியிலிருந்து காலை 6.30 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இவ்விரு பஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒன்றையொன்று முந்திச் செல்ல எத்தனித்த வேளையிலேயே பாடசாலை மாணவர்கள் கடந்து கொண்டிருந்த மஞ்சள் கடவையில் மோதிக் கொண்டன.
அதிருஷ்ட வசமாக அந்நேரம் வீதியைக் கடந்து கொண்டிருந்த மாணவர்கள் வீதியருகில் பாய்ந்து விலகிச் சென்று ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டுள்ளனர்.
இவ்விரு பஸ்களிலும் கொழும்பை நோக்கிப் பயணித்த பயணிகள் வேறு பஸ்களில் தமது பயணத்தைத் தொடர்ந்த அதேவேளை ஏறாவூர் பொலிஸார் பஸ்களை பொலிஸ் நிலையம் கொண்டு வந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.