கிழக்கில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும்  அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று  இடம்பெற்றது,

கிழக்கு  மாகாண சபைக்கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற  இந்த சந்திப்பில் ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகளான ராபர்ட் ஹோல்புரூக்,ஸ்டீபன் எம் பாக்ஸ்டன் ஆகியோர் பங்கேற்றதுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஷ்ணபிள்ளை,எம் லாஹிர் உட்பட முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

 இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்க நிதியுதவியுடன் கிழக்கில் சில பாடசாலைகளின் திருத்தப்பணிகள் மற்றும் அபிவிருத்திகள் இடம்பெற்று வரும் நிலையில் கிழக்கின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைகள் கிழக்கு முதலமைச்சரால் முன்வைக்கப்பட்டன,

அத்துடன் வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் கிழக்கு முதல்வரின் கனவுத் திட்டமான சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையொன்றை கிழக்கில் உருவாக்குவதற்கு அமெரிக்கா உதவ முன்வர வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் கிழக்கின் உள்ளூராட்சி மன்றங்களின் வினைத் திறனை அதிகரித்து அவற்றை இலாபமீட்டும் ஸ்தாபனங்களாக மாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.