கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அம்பாறை பிராந்தியத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

(சப்னி அஹமட்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அம்பாறை பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது.

அந்தவகையில் அம்பாறை, திம்பட்டுவ பிரதேசத்தில் 01 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாரமரிப்பு மருத்துவ நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வும், அவ்வைத்தியசாலையில் 04 மில்லியன் ரூபா நிதியில் புதிய வைத்தியர்களுக்கான விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு வைத்தியசாலை அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளித்தார்.

இதன் போது, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திராச கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மெத்தானாந்த சில்வா, மஞ்சுல பெணாண்டோ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாண பணிப்பாளர் முருகானந்தன், ஆயுர் வேத திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீதர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் சியாகுல் ஹக், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திலக் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ. நயீம், வைத்தியர்கள் உள்ளிட்டவர்களுடன் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அம்பாறை, பொறபல பிரதேசத்தில் 5.3 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலையும், அம்பாறை, செனரட்புரயில் 16 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப பாரமரிப்பு நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.