திருத்தங்களின் அடிப்படையிலான 20வது திருத்தத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கினோம் - கி. துரைராசசிங்கம்


20வது திருத்தச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருதத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவை வழங்கியிருக்கின்றோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 5.5 மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை மயிலங்கரச்சி பிரதேச பிரதான வீதி காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நேற்றைய  தினம் நடைபெற்றது இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
20வது திருத்தச் சட்டமானது மாகாணசபைகளினுடைய தேர்தல்கள் ஓரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது ஏற்கனவே இருக்கின்ற பாராளுமன்ற திருத்தத்தின் படி பாராளுமன்றத் தேர்தல் தொகுதி அடிப்படையிலும், உள்ளுராட்சித் தேர்தல் வட்டாரங்கள் அடிப்படையிலும் நடைறெ இருக்கின்றன. அதே போன்று மாகாணசபைத் தேர்தல்களும் மாகாண வட்டாரங்கள் என்ற அடிப்படையில் நடைபெற வேண்டி இருக்கின்றது.

இவற்றை உள்ளடக்கியதாக வந்த திருத்தத்தில் மாகாணசபைகளைக் கலைக்கின்ற அதிகாரம் பாராளுமனறத்திற்கு கொடுக்கக் கூடிய விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தது. இந்த ஏற்பாட்டிற்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து அதற்கான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று இது தொடர்பான அமைச்சர்களோடு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரோடும் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

அந்த வகையில் முதற் தடவையாகக் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தை நாங்கள் கடந்த 07ம் திகதி மாகாணசபையில் விவாதிப்பதில்லை என்று திர்மானித்து திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். அதே நேரத்திலே ஏனைய மாகாண சபைகளும் இதே வித அபிப்பிராயங்களைத் தெரிவித்தன. அந்த வகையில் அதற்கான திருத்தம் கொண்டுவரப்பட வேண்டிய விடயம் உணரப்பட்டு அந்தச் சட்டமூலத்திற்கான திருத்தத்தை உயர் நீதிமன்றத்திலே சமர்ப்பித்திருந்தார்கள். இதன் படி கடந்த 11ம் திகதி நடைபெற்ற மாகாணசபையிலே இந்தத் திருத்தத்தை உள்ளடக்கியதான 20ம் திருத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், திருத்தங்களின் அடிப்படையிலான எங்களின் ஆதரவு என்கின்ற எமது அபிப்பிராயத்தை நாங்கள் தெரிவித்திருந்தோம்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சட்டமூலம் அமுலாக்கப்பட்டதில் இருந்து ஒரு வருட காலத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மாகாணசபைகள் கலைய வேண்டும் என்றும் எங்களுடைய மாகாணசபை கலைய இருக்கின்றது என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணசபை உட்பட இன்னும் இரண்டு மாகாண சபைகள் கால நீடிப்புச் செய்யப்படக் கூடியதாகவும் ஒரே நாளில் மாகாணசபைத் தோத்தல்கள் நடைபெறக் கூடியதாகவும் அவையும் மாகாணசபைகளுக்குரிய வட்டார அடிப்படையிலே நடைபெறக் கூடியதாகவும் இருக்கும் என்கின்ற அந்த ஏற்பாட்டுக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றோம்.

கிழக்கு மாகாணசபையில் இது 16 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது இதில் குறிப்பாக நாங்கள் சொல்லப் போனால் 20வது திருத்தச் சட்டத்திற்காக முன்மொழியப்பட்டிருக்கின்ற திருத்தத்தை உள்ளடக்கியதாக இந்த 20வது திருதத்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றோம் என்ற அடிப்படையில் தான் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.