மட்டக்களப்பில் மயானக் காணி தொடர்பில் சர்ச்சை!

மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானக்காணி வழங்கப்பட்ட விடயத்தில் சிலர் சர்ச்சையை ஏற்படுத்தியதால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாததால் நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் பிரதேச செயலாளர் எடுத்துக் கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் பிரதேச செயலாளரைப் பணித்திருந்தார்.

வாகரை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கணுக்காமடு எனும் கிராமத்தின் அருகில் ஒரு ஏக்கர் நிலம் இனங்காணப்பட்டுள்ளது.

இக்காணியை அரச சட்டத்தின் கீழ் பாராதீனம் செய்வதற்கான ஏனைய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வாகரை பிரதேச செயலாளரால் ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இக்காணியைப் பார்வையிட மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் வாகரைப் பிரதேசத்தில் வாழும் கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைச் சார்ந்த ஆர்வலர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) குறித்த காணி அமைந்துள்ள இடத்திற்குச் சென்றனர்.

இதன்போது அங்கு திடீரென வந்து சேர்ந்த ஒரு குழுவினர் சர்ச்சையில் ஈடுபட்டதால் இவ்விவகாரத்தை வாகரைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வாகரைப் பிரதேச சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக, இருசாராரையும் நேற்று வாகரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த பொலிஸார், நாளை (புதன்கிழமை) பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்துத் தரப்பினரும் கலந்து பேசி முடிவெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் குருகுலசிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.