ஏறாவூர் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

(ஏ.எம் றிகாஸ்)

மட்டக்களப்பு - ஏறாவூர்  பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் இந்தியா அரசாங்கத்தினாலும் வழங்கப்படவுள்ள 27 கோடி நாற்பது இலட்சம் ரூபா நிதியில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தினை அமுல்செய்வது தொடர்பான  உயர்மட்ட மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில்  நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் முன்னாள் மாகாண அமைச்சர் எம்எஸ் சுபைர், நகர சபையின் முன்னாள் முதல்வர் எம்ஐஎம் தஸ்லிம் , நகர அபிவிருத்தி  அதிகாரசபை உயரதிகாரிகள், ஏறாவூர் மற்றும் செங்கலடி உள்ளுராட்சி மன்றங்கள்  பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட  உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதான வீதி விஸ்தரிப்புப் பணிகள் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிடன்  சுமார் 12 கோடி 50 இலட்சம் ரூபா நிதியில்   எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று நகர திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள   ஏழு கோடி ரூபா நிதியில் வாவிக்கரையோர வீதி விஸ்தரிக்கப்படவுள்ளது.

 மேலும் இரண்டுகோடி 20 இலட்சம் ரூபா நிதியில் அஹமட் பரீட் பொது விளையாட்டு மைதானம் நவீனமயப்படுத்தும் திட்டமும்   இரண்டு கோடி 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் சவுக்கடி கடற்கரை பூங்காவும்  அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அத்துடன் மூன்று கோடி 20 இலட்சம் ரூபா நிதியில் உள்ளக வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.

இத்திட்டங்கள் ஏலவே அமுல்செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் கிழக்கு மாகாண சபையின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாமதமடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன் நகரசபையின்  கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.