மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுப் பொலிஸ் பரிசோதனை

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டுப் பொலிஸ் பரிசோதனை வவுணதிவு பொலிஸ் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 17.10.2017 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ரி. நஸீர் தலைமையில் பொலிஸ் வளாகத்தில் நடைபெற்றது.




மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

பொலிஸ் பரிசோதனையின்போது பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் என்பனவற்றின் தராதரம் மற்றும் பராமரிப்பு என்பன பரிசீலிக்கப்பட்டதுடன் பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது சேம நலன்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அங்கு பொலிஸார் மத்தியில் உரையாற்றிய சமன் யட்டவர, 24 மணிநேரமும் மக்களுக்குச் சேவை செய்யும் அர்ப்பணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிறந்த முன்மாதிரிகளைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பதன் மூலம் சமூகத்தைச் சிறப்பாக வழி நடாத்த முடியும்.

பிரஜைகள் அனைவரும் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதன் மூலம் சமுதாய அமைதி பாதுகாக்கப்படுவதற்கு பொலிஸார் எந்நேரமும் உறுதுணையாக இருக்கின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் - பொதுமக்கள் உறவு என்பது மிகவும் அந்யோந்யமானதாக இருக்க வேண்டும்.

அதேவேளை சிவில் சமூக இயல்பு வாழ்க்கையை சீர்குலையாமல் பாதுகாப்பதில் பொலிஸார் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்களுக்கு பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்றார்.