பிள்ளைகளை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள் - கி. துரைராசசிங்கம்


 தனியார் கல்வி நிலையங்கள் அவர்களிடம் எது இருக்கின்றதோ அதைக் கொடுத்து பிள்ளைகளையெல்லாம் பட்டதாரிகளாக ஆக்க முயற்சிக்கின்றார்கள். பிள்ளைகளை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள்.

அவர்கள் படித்து முடிந்ததன் பின்பு தொழிற் சந்தையிலே பெறுமதி மிக்கதான பட்டங்களைப் பெறுவதற்கு தனியார் கல்வி நிலையங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

பாடசாலை நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிற்சந்தைகளில் என்ன என்ன கல்வித் தேவைகள் இருக்கின்றதோ அதற்கேற்ற வகையில் மாணவர்களை வழிநடத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் எல்லோருக்கும் இருக்கின்றது. மாணவர்கள் வெவ்வேறு துறைகளைத் தெரிவு செய்வதற்கு அவர்களுக்குத் தேவையான முக்கிய தகுதியாக ஆங்கிலத்தில் சி தர சித்தி பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆங்கில ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதிலே உள்வாங்கிக் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான விடயம் இதுவாகும்.

 கிழக்கு மாகாணத்தில் உள்ள நியமனங்களில் எல்லாம் பட்டதாரிகள் நிரப்பட்டுவிட்டனர். எனவே இனிவருகின்ற பட்டதாரிகளுக்கு இந்த ஆசிரியர் துறையிலே வேலை கிடைப்பது என்பது கடினமே. அடுத்த துறைகளுக்கு இதை விடக் குறைந்த புள்ளியோடு பாடநெறிகள் இருக்கின்றன அந்த விதத்தில் மாணவர்களை பாடசாலைகளும், அதிபர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எம் மத்தியில் இன்னுமொரு சவால் இருக்கின்றது தனியார் கல்வி நிலையங்கள் அவர்களிடம் எது இருக்கின்றதோ அதைக் கொடுத்து பிள்ளைகளையெல்லாம் பட்டதாரிகளாக ஆக்க முயற்சிக்கின்றார்கள். இது தொடர்பில் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். பிள்ளைகளை தனியார் வகுப்புகளுக்கு அனுப்புவதென்றால் பிள்ளைகளுக்குத் தேவையான பாடநெறிகள் அங்கு படிப்பிக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பல ஆசிரியர்கள் இலக்கு வைத்துப் பணம் உழைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

பிள்ளைகளிடம் இருந்து பணம் வருகின்றது. அவர்கள் உழைக்கின்றார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு என்ன கிடைக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். எனவே பிள்ளைகளை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்கி வேலையற்ற பட்டதாரிகள் என்ற பட்டத்தைக் கொடுக்காதீர்கள். அவர்கள் படித்து முடிந்ததன் பின்பு தொழிற் சந்தையிலே பெறுமதி மிக்கதான பட்டங்களைப் பெறுவதற்கு தனியார் கல்வி நிலையங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பில் பெற்றோர்களும் மிக விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்த நாட்டிலே தற்போது இருக்கின்ற இதே சூழ்நிலை இருந்தால் தான் எமது பிள்ளைகள் படிப்பார்கள், இதே சூழ்நிலையில் எமது கிராமங்கள் இருந்தால் தான் எமது ஆசிரியர்களால் படிப்பிக்க முடியும், இதே சூழ்நிலையில் இருந்தாhல் தான் இந்த நாட்டில் சமாதானம் நிலவும் என்பதையும் அனைவரும் மனதில் இருத்த வேண்டும் என்று தெரிவித்தார்.