காரொன்று மோதியதில் குடும்பஸ்தர் பலி ! கார் சாரதி தப்பியோட்டம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டையில்  முன்பாக நேற்றிரவு (07) 11.30 மணியளவில் சொகுசுக் காரொன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பலியானவர், தம்பிலுவிலை சேர்ந்தவரும் ,  திருக்கோவில் 02 நாவலடி வீதியில் வசிப்பவருமான  பத்மநாதன் விக்னேஸ்வரன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், தம்பட்டை கடற்கரை பகுதியில் இருந்து   வீதியைக் கடக்க முற்பட்ட வேளை,  வேகமாக வந்த கார், குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில், ஸ்தலத்திலேயே அவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து, கார் சாரதி தப்பியோடியுள்ளாரென ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரைக் கைப்பற்றியுள்ள திருக்கோவில் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.