ஏர்முனையின் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின எழுச்சி விழா

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஏர்முனை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் எழுச்சி விழா நேற்று  05.12.2017  வந்தாறுமூலை விஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

புகலிட மாற்றுத்திறன் மாணவர்களினதும் ஏர்முனை மாற்றுத் திறனாளிகளினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாற்றுத் திறனாளிகளாயிருந்து சுயதொழில்களை மேற்கொண்டு முன்மாதிரியாய் செயற்பட்டுவரும் பலரும் இதன்போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை மாற்றுத் திறனாளிகளினால் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களினது கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

ஏர்முனை அமைப்பின் செயலாளர் து.அரிதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது சுகாதார வைத்திய அதிகாரி இ.ஸ்ரீநாத், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்களான எஸ்.அருள்மொழி, வீ.செல்வநாயகம், நவஜீவன மாவட்ட இணைப்பாளர் எல்.ஆர்.டேவிட், சமூக சேவை உத்தியோகத்தர் பொ.டிமலேஸ்வரன், வை.எம்.சீ.ஏ இணைப்பாளர் எஸ்.பற்றிக், வேள்ட் விஷன் திட்ட இணைப்பாளர் கே.அமுதராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளன தலைவர், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை மாற்றுத் திறனாளிகள் தினமாகிய கடந்த டிசம்பர் 3ஆம் திகதி செங்கலடி பிரதான வீதியில் விழிப்புணர்வு நாடகமும் சந்தையில் சிரமதானமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.