(துறையூர் தாஸன்)
தைப்பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மத்தியமுகாம் சலேஞ்ஜஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த கலை கலாசார பாராம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவர் கெளரவிப்பு ஆகியன கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை(14) மத்தியமுகாம் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன் ஒரு பகுதியாக, அணிக்கு பதினொரு பேர் கொண்ட மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகிய மண்டூர் அருண்மணி விளையாட்டுக்கழகமும் துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகமும் களமாடி, துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தையும் 10,000 ரூபா பணப்பரிசினையும் சுவீகரித்துக்கொண்டது.
முட்டி உடைத்தல், கிடுகு இளைத்தல், தேங்காய் திருவுதல், யானைக்கு கண் வைத்தல் ஆகிய கலை கலாசார பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றதுடன் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் இதன்போது வழங்கப்பட்டது.