பிணைமுறி விசாரணை அறிக்கை இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளன

(எப்.முபாரக்) 

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று(17)  இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலேயே குறித்த அறிக்கை வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பல்வேறு தரப்புகளும் அழுத்தம் கொடுத்துவருகின்ற நிலையில் நேற்று (16) அதற்கான உத்தியோகபூர்வ ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன எனவும் இன்று (17) நண்பகல் வேளையில் இணையதளத்தில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேலும்  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்ற செய்திகளில் உண்மையில்லை எனவும்  மக்களுக்கு உண்மையைக் கொண்டுசேர்ப்பதில் தாம் உறுதியாகவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.