மனைவி அடித்துக் கொலை கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை 5 மாதக் குழந்தையும் தற்போது பெற்றோரை இழந்த சம்பவம்

(வரதன்)

மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை 5 வயது மகனும், 5 மாதக் குழந்தையும் தற்போது பெற்றோரை இழந்த சம்பவம் கிழக்கில் பதிவு

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாமுனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

 36 வயதுடைய கந்தசாமி வேதநாயகம், 29 வயதுடைய நீலகண்டன் யோகநாயகி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.நேற்று இரவு வேளை நடைபெற்ற குடும்பச்சண்டையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தொடர்ச்சியாக இருவருக்குமிடையில் இரவு  வேளைகளில் சண்டை நடைபெறுவதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

மனைவி படுக்கையில் உயிரிழந்த நிலையிலும், கணவன் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருவரும் உயிரிழந்துள்ளனர். இருவருக்கு மிடையிலான சண்டையில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கணவனின் மூத்த தாரத்தின் 5 வயது மகனும், தற்போதைய திருமணத்தின் 5 மாதக்குழந்தையும் தற்போது பெற்றோரை இழந்தவர்களாகியுள்ளனர். வவுணதீவு பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சடலத்தினை மீட்பதற்கான நடவடிக்கைகளிலும்ஈடுபட்டுள்ளனர்.