திருக்கோவில் சங்கமன் கிராமம் வீடமைப்பு திட்டம் சஜித் பிரேமதாசாவினால் நாளை கையளிப்பு .

(அஷ்ரப் ஏ சமத்)

தேசிய  வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதிலும் ” செமட்ட செவன” திட்டத்தின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புக் கிராமங்களின்   50வது மாதிரிக் கிராமமான ”சங்கமன் கிராமம் ”  திருக்கோவில் பிரதேச செயலாளா் பிரிவில்   (23) வெள்ளிக்கிழமை -  மு.ப 09.30 மணிக்கு  வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால்  மக்களிடம் கையளிக்கப்படும்.



இவ் வீடமைப்பு திட்டம் திறந்து வைக்கும் நிகழ்வின்போது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சாினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

 சங்கமன் பிரதேசத்தில்  வீடுகளற்ற   25 தமிழ் குடும்பங்கள் வீடுகளைப் பெறுகின்றனா். அத்துடன் இவ் வீட்டுரிமையாளா்களுக்கான இலவச காணிகளுக்கான  உறுதிகளும்  வழங்கப்படும். அத்துடன் 100 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ருபா பெறுமதியான வீட்டுக்கடன்களுக்கான காசோலை வழங்குதல், ”சில்பி சவிய” எனும் நிர்மாணத்துறையில்  100 இளைஞா் யுவதிகளுக்கு 50 இலட்சம் ருபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும்.  ”சொதுரு பியச” வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ருபா வீடமைப்புக் கடன்கள்  வழங்கி வைக்கபடும்.   250 குடும்பங்களுக்கு 1250 மாமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்படும். அத்துடன்  நிரமாணத் தொழில் பயிற்சியில் அளிக்கப்பட்ட   80 பேருக்கு நிர்மாணத்துறை அதிகார சபையினால்  சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படும்.

இந் நிகழ்வில் அமைச்சா் தயாகமகே, பிரதியமைச்சா்களான அநோம கமகே, சிறியானி விஜேவிக்கிரம, பைசால் காசீம், எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்களான க.  கோடீஸ்வரன், எம்.ஜ.எம்.   மன்சூர்,  உட்பட மாவட்ட அரசாங்க அதிபா், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பல்ன்சூரியவும் கலந்து சிறப்பிப்பாா்கள்.