கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறக்க கற்றுக் கொள்ள வேண்டும் : கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி

கடந்த காலத் தவறுகளை மன்னித்து மறக்க கற்றுக் கொள்ள வேண்டும், நிலைமைகள் அவ்வப்போது மாறும் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல    தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

  போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற்  ,   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்,  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஸித்த பனன்வல  மற்றும் படையதிகாரிகள், அடிகளார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய பனன்வல கல்வியை பணம் கொடுத்து வாங்க முடியாது. சமகால கல்வி  திட்டத்திலே ஆரோக்கியமான உள்ளம் இருந்தால் ஆரோக்கியமான உடலைக் கொண்டிருக்கும்.

நாங்கள் ஒருவர் மற்றவரில் கரிசனை கொள்ள வேண்டும்.
நாம் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். வாழ்க்கை அவ்வளவு இலகுவானதல்ல ஆனால் இன்னமும் அது நம்பிக்கை தரும் சிறந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. நாம் மற்றவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.
வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது.

மாணவர்களாகிய நீங்கள் எங்கே பயணிக்க வேண்டும் என்ற உயரிய கனவோடு சிறந்ததைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். 90 சத வீதமான உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் திராணி உங்களிடமே உள்ளது. வாழ்க்கையை வீணடிக்காமல் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையளிக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

நாம் எம்மைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு எமது பிரதிபலிப்பைக் காட்ட முடியும். பலமுறை சிந்தித்துச் செயற்படுங்கள். ஒருபோதும் கல்வியைக் கைவிடாதீர்கள்.
கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும் மறந்து ஒவ்வொருவரையும் மன்னிக்கவும் வேண்டும். நல்லதோ கெட்டதோ நிலைமைகள் அவ்வப்போது மாறும்.” என்றார்.