வாழைச்சேனையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரைக் காணவில்லை

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டமாவடி 3ஆம் வட்டார மீன்பிடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் ஜுனைதீன் (வயது 45) என்பவரே கடலில் வைத்துக் காணாமல் போயுள்ளார்.

சம்பவத்தில் காணாமல் போனவர் உட்பட மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடிப்பதற்காக இயந்திரப் படகு ஒன்றில் பயணித்துள்ளனர்.

இதன்பின்னர் அன்றிரவு மீன்பிடிக்க வலைகளைப் தயார்படுத்தி விட்டுத் தூங்கியதாகவும், சிறிது நேரத்துக்குப் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது, அசனார் ஜுனைதீனை காணவில்லையெனவும் ஏனைய இருவரும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் படகு உரிமையாளருக்கு அலைபேசி மூலம் தெரியப்படுத்தியதுடன், நேற்று (புதன்கிழமை) மாலை கரைக்குத் திரும்பிய நாம் இவ்விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தோமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் போன அசனார் ஜுனைதீனைத் தேடும் பணிகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.