சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!


சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச திணைக்களத் தலைவர்களுக்கும் இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் திட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்துள்ளது.

பிரதேச பொதுமக்கள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து நிதியுதவி, மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய ஆடைகள், பால்மா பைக்கற்றுக்கள், குடிநீர் போத்தல்கள் போன்ற நிவாரணப் பொருட்களை சேகரித்து மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 2018.06.01ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறும் பழுதடையக் கூடிய பொருள்களைச் சேகரிக்க வேண்டாம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருட்களைக் கையளிப்பது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், மட்டக்களப்பு தொலைபேசி இல. 065-2227701, 0773957885 மற்றும் நிருவாக உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் மட்டக்களப்பு 065-2222365, 0779000880 ஆகிய இலக்கங்களுக்குத் தொடர்புகளை ஏற்படுத்தி பொருட்களைக் கையளிக்க முடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்தக்கது.