ஞானசார தேரருக்கு ஆதரவு தெரிவித்து 500 இற்கும் மேற்பட்ட பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!


பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 500 இற்கும் மேற்பட்ட பிக்குகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - புறக்கோட்டை மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள போதி மாராமய விகாரைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளம் கணப்பட்டார்.

இந்த நிலையில் ஞானசார தேரருக்கு ஆறுமாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.