கிழக்கை தன்வசமாக்க அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிட வேண்டும்


(செ.துஜியந்தன்)
 கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பை சமூகஇ பொருளாதாரஇ அரசியல் ரீதியாக பாதுகாக்க வேண்டுமானால் இங்குள்ள அரசியல்கட்சிகளின் தமிழ்ப்பிரதி நிதிகளும் ஒரு அணியின் கீழ் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து தேர்தல்களில் போட்டியிட முன்வரவேண்டும்.

இவ்வாறு கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர்களில் ஒருவரான செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் கொள்கைவிளக்க கூட்டம் மண்டுனைப்பற்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. இதில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர் சிரேஸ்டசட்டத்தரணி த.சிவநாதன் உட்பட அதன் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து பேசிய செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்.....
எதிர்வரும் தேர்தல்களில் கிழக்குத் தமிழர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டியுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில்  அதியுட்சபட்ச ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பெர்துச்சின்னத்தில்  ஒன்றிணைந்த ஒரே அணியில் போட்டியிட வேண்டும்.

பிரிந்து நின்று ஆளுக்கொருபக்கம் வாக்குகளைச் சிதறடிப்பதினால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கான வாய்ப்பு இழக்கப்படும் நிலையே தோன்றும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் கிழக்குத் தமிழர்களின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும்.

கிழக்குத்தமிழர் ஒன்றியட் அனைவரையும் ஒன்றிணைக்கும் செய்பாட்டில் ஈடுபட்டுவருகின்றது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. கிழக்கிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுபடத்தயாராகவுள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்களும், கட்சிகளும்தான் தனிநபர் மற்றும் கட்சி நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதினால் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றுபட தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கள் தங்கள் கட்சிகளுக்குள் செல்வாக்குமிக்க கட்சி முக்கியஸ்தர்கள் பொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைவதற்கு தங்கள் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். கிழக்குமாகாணத்தை தமிழர்கள் தம்வசம் வைத்திருப்பதானால் எதிர்வரும் கிழக்குமாகாண சபைத்தேர்தலில் சகல தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.

சகல தமிழ்க் கட்சிகளையும் ஒருபொதுச்சின்னத்தின் கீழ் ஒன்றிணைய வைப்பதற்க்கு கிழக்கு மாகாண தமிழர்களட அனைவரும் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் கிழக்குத் தமிழர் ஒள்றியத்தின் பின்னால் அணிதிரள வேண்டும் என்றார்.