பெண்ணை துஷ்பிரயோகம் செய்து அவரது பிள்ளைகளும் விற்பனை! பிடிபட்டார் நகர சபை தவிசாளர்!


லிந்துலை நகர சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியல்

அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப்பகுதியிலிருந்து தலவாக்கலை நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 04.06.2017 அன்று வருகை தந்த தாய் மற்றும் பிள்ளைகளை கூட்டிச் சென்று தாயை துஷ்பிரயோகம் செய்து பிள்ளைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இருவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சமோத் ஜெயசேகர இன்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸாரால் 03.06.2018 அன்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணையின் பின் 04.06.2018 அன்று 4.30 மணியளவில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் கணவர் ஆகியோர் நுவரெலியா பொலிஸாரிடம் 03.06.2018 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைபாடு ஒன்றை பதிவு செய்ய சென்ற பொழுது கிடைக்கப்பெற்ற விவரங்களை அடுத்தே பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த சம்பவத்தில் கடந்த வருடம் (04.06.2017) அன்று தாய் தனது பிள்ளைகளுடன் அக்கர்ப்பத்தனை நகரத்திலிருந்து பேரூந்தில் தலவாக்கலை நகரிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது இரு நபர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் இவர்களை கூட்டிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு கூட்டிச்செல்லப்பட்ட இவர்களில் குறித்த தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தொடர்ந்து சில நாட்கள் உட்படுத்திய இவர்கள் இவ்விடயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதன்போது தான் வெளிநாடு செல்வதற்காக தாயாராகவுள்ளதாகவும், எனது பிள்ளைகளை எங்காவது விட்டு செல்ல வேண்டும் எனவும் பிள்ளைகளின் தந்தை கொழும்பில் தொழில் செய்வதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட நபர்கள் நகர சபை தவிசாளர் அசோக சேபால மற்றும் சபையின் உறுப்பினர் ஒருவரிடத்தில் அழைத்துச் சென்று நிலைமையை கூறியதையடுத்து தாயிடமிருந்த 5 வயது சிறுமியை காலி பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்பனை செய்துள்ளனர்.

அதேவேளையில் இரண்டரை வயது சிறுவனை போகாவத்தை பகுதியில் பௌத்த விகாரை பராமரிப்பாளர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது தாய் கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்றுள்ளார். அங்கு இவர் சம்பாதித்த பணத்தில் கைப்பேசி ஒன்றை பெற்று தனது கணவருக்கு கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்ததை விவரித்துள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் வீடு திரும்பியதையடுத்து 03.06.2018 அன்று பிற்பகல் நுவரெலியா பொலிஸ் நிலைய சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைபாடு ஒன்றினை 5 வயது சிறுமி தொடர்பில் பதிவு செய்த பொழுது மேலதிக விவரங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடதக்கது.