காரைதீவில் சிறப்பாக இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தரது 71வது சிரார்த்ததினம்

(காரைதீவு நிருபர் சகா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரது 71வது சிரார்த்த தினம் (19.07.2018) வியாழக்கிழமை காலை அவர்பிறந்த காரைதீவு மண்ணில் அனுஸ்ட்டிக்கப்பட்டது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றம் ஏற்பாடுசெய்த இந்நிகழ்வு விபுலாநந்த மணிமண்டப வளாகத்தில் பணிமன்றத்தலைவர் வி.ஜெயநாதன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக சுவாமியின் திருவுருவச்சிலைக்கு பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா பணிமன்ற போசகர் சி.தங்கவேல் உள்ளிட்ட பலர் மலர்மாலை அஞ்சலி செலுத்தினர்.

பணிமன்றச் செயலாளர் கு.ஜெயராஜி பஞ்சாராத்தி தீபாராதனை காட்டியதைத்தொடர்ந்து வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற அடிகளாரது பாடல் இசைக்கப்பட்டது.
அதிதிகள் மாணவர்கள் புஸ்பாஞ்சலிசெலுத்தினர்.
தலைமையுரையை தலைவர் வெ.ஜெயநாதனும் சிறப்புரையை முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவும் நன்றியுரையை செயலாளர் கு.ஜெயராஜியும் நிகழ்த்தினர்.

சுவாமியின் மருமகள் திருமதி கோமேதகவல்லியின் மகள் திருமதி விஜயா புவனராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பணிமன்ற புனருத்தாரணப்பணிகள்  நடைபெற்றுவருவதனால் சுவாமிகளின் 71வது சிரார்த்ததினம் மிகவும் எளிமையாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.