கதிர்காம பாத யாத்திரைக் காட்டுப்பாதை நாளையுடன் மூடப்படும் !


(காரைதீவு நிருபர் சகா)
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை(22) ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்படுமென்று அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் தெரிவித்தார்.

கடந்த 4ஆம் திகதி இக்காட்டுப்பாதை திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் இப்பாதையால் பயணித்துள்ளனர்.
 
ஒரேயோருவர் இடைநடுவில் மரணித்துள்ளார்.ஏனையோர் காட்டு மிருகங்களின் எவ்வித தாக்கமும் இல்லாமல் கந்தனருளால் கதிர்காமம் போய்ச்சேர்ந்துள்ளனர்.

இம்முறை 10 இஸ்லாமியசகோதரர்களும் உருத்திராக்கமணிந்து மரக்கறி புசித்து சைவமுறைப்படி இக்காட்டுப்பாதையால் பயணித்துள்ளனர்.

கதிர்காம தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருப்பதால் இறுதியாக காட்டினூடாக பயணிக்கும் திகதி நாளை(22)யுடன் நிறைவடைகின்றது.

இறுதித்தறுவாயில் சென்ற யாத்திரீகர்கள் குமுக்கன் மற்றும் உப்பாற்றைக்கடந்து வியாழையில் சந்தோசமாகச் சமைத்துண்டு இளைப்பாறிச் செல்வதை காணக்கூடியதாயிருந்தது.