செங்கலடிப் பிரதேசத்தில் 8 பேர் கைது !


மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று (புதன்கிழமை) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆற்றிற்குள் உழவு இயந்திரங்களை செலுத்தி மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினர் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது மண் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.