மாநகர முதல்வர் செயலகம் அமைக்க மட்டக்களப்பு மாநகர சபை அனுமதி

(வரதன்)
மட்டக்களப்பு மாநகர சபையில் முதல்வர் செயலகம் ஆரம்பிப்பதற்கான அனுமதியை மட்டக்களப்பு மாநகர சபை இன்று வியாழக்கிழமை வழங்கியது, சபையின் 9ஆவது அமர்வு முதல்வர் தி.சரவணபன் நடைபெற்ற போதே இந்த அனுமதியை வழங்கியது.



இன்றைய அவர்வில், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழங்கிய ஏகமானதான ஆமோதிப்பின் அடிப்படையில் மாநக முதல்வருக்கான செயலகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை முதல்வர் வருகை, மாநகர கீதம், இறை வணக்கம், முன்னைய அமர்வுக் கூட்டறிக்கை அனுமதியை அடுத்து, முதல்வர் நிதிக்குழுத் தீர்மானங்களுக்கான அறிவிப்பின் போது மாநகர உத்தியோகத்தர்களுக்கான இடர்கடன், நிருவாகப்பராமரிப்புச் செலவு அதிகரிப்பு, கழிவு நீர் அகற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு, மாநகர உறுப்பினர்களுக்கான தொலைபேசிப் பாவனைக் கொடுப்பனவு, கட்டட அனுமதி உள்ளிட்ட விடயங்களுக்கு அடுத்ததாக மாநகர முதல்வர் செயலகத்துக்கான பிரேரணையை சபை அனுமதிக்காக முன்வைத்தார்.

இலங்கையிலுள்ள மாநகர சபைகள் அனைத்திலும் இந்த முதல்வர் செயலகம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாநகர்களுக்கே இந்த செயலகம் அமைக்கப்படவில்லை என்ற முன்வைப்பு முதல்வரால் கொண்டுவரப்பட்டது. அதனையடுத்து சபை உறுப்பினர்களின் ஏகமானதாக ஒப்புதலின் அடிப்படையில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய அமர்வில், ஆசிய மன்றத்தின் ஊடாக அவர்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள், நிலுவையாக உள்ள நிதிகளை அறவிடுதல், மாநகர வாகனங்களை வாடகைக்கு விடுதல் தொடர்பான அறவீடுகள், மாநகர அபிவிருத்திச் செயற்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மாநகர முதல்வரால் நிலுவையாக உள்ள வரி அறிவீட்டு மாதத்திற்கான பிரகடனம் கடந்த 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வட்டாரத்துக்குமென 10 பேர் கொண்ட குழுக்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிற்கான பணிகளும் பொறுப்பளிக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வரி அறிவீட்டு மாதத்தில், முதலாம் வாரம் வரி அறவீட்டுக்கான விழிப்புணர்வு வாரமாகவும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்கள் வீடுகள், மற்றும் வியாபார நிலையங்களுக்கு சென்று வரி அறவீடு செய்யும் வாரமாகவும், இறுதி வாரம் வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாரமாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நிறைவில் சிறந்த வரி செலுத்துனர்கள், சிறந்த வரி வசூலிப்பாளர்கள், சிறந்த வரி வசூலிப்புக் குழு என்பன தெரிவு செய்யப்பட்டு கொளரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.