புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை அமைப்பது விடயமாக ஜனாதிபதி அவர்கள் கரிசனை செலுத்தி அதனை முழுமையாக மூடிவிடவேண்டும்

(க. விஜயரெத்தினம்)

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை அமைப்பது விடயமாக ஜனாதிபதி அவர்கள் கரிசனை செலுத்தி அதனை முழுமையாக மூடிவிடவேண்டும் என்பதே மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களின் எண்ணமாகும்.
இதனை தங்குதடையின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் வெள்ளிக்கிழமை(7.9.2018)  அனுஸ்டிக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த பூரண ஹர்த்தால் அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டது.
ஹர்த்தாலுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினால் அப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் பாரிய வறட்சியை எதிர்நோக்கப்படும் என்ற காரணத்தினால் அதனை தடுத்து நிறுத்துமாறு கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடாத்தப்பட்ட நிலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த குடிநீர் தொழிற்சாலையினை நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

பல்லின சமூகங்கள் வாழும் நாட்டிலே தனியொரு சமூகத்தினரின் அரசியல் செயற்பாட்டுக்கும்,அபிவிருத்திக்கும் ஜனாதிபதி, பிரதமர் கருணைகாட்டுவது தவிக்கப்படவேண்டும் என்பதே ஹர்த்தாலின் நோக்கமாகும்.இவ் ஹர்த்தாலானது தமிழ்மக்களினதும்,தமிழ் உணர்வாளர்களினதும் ஆதரவுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரியபுல்லுமலை கிராமத்தில் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டுவருகின்ற குடிதண்ணீர் தொழிற்சாலையை மூடுமாறுகோரி கடந்த பல மாதங்களாக அப்பிரதேச மக்களால்  பல தடவைகளில் ஜனநாயக போராட்டங்களை நடத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியும் வந்துள்ளனர்.
இருந்த போதிலும் தொடர்ச்சியாக நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து வண்ணம் உள்ளது. இத்தொழிற்சாலை அப்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுவதால் விவசாயம், விலங்குவேளாண்மை மற்றும் மக்களின் குடிநீர் பற்றாக்குறை நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் நிலமை  ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.
எனவே யாராக இருந்தாலும் தமிழ்மக்களின் நலன் பாராது காத்தான்குடி அரசியல் தலைமைத்துவம் தமது நலனை மாத்திரம் கருத்தில்கொண்டு செயற்படுகின்றது.இதனை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள்,புத்திஜீவிகள்,வன்மையாக கண்டிப்பதுடன் கடுமையாகவும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் ஹர்த்தால் தினத்தன்று வீட்டுக்குள் முடங்கியவாறு அகிம்சைவழியில் தமது எதிர்பை தெரிவித்துள்ளார்கள்.கடந்த காலங்களில் ஆயுதப்போராட்டங்கள் மூலம் தங்களின் உரிமையை கோரிவந்த தமிழ்மக்கள் பலனிக்காமல் தற்போது இனநல்லிணக்கம்,சமாதானம்,சகவாழ்வுடன் செய்யும் தொழிலை செய்து தமிழ்மக்கள் நிம்மதியுடன் தமக்குரித்தான சகல உரிமைகளையும்,அபிவிருத்திகளையும்,தேவைகளையும் எதிர்பார்த்தே நல்லாட்சியுடன் பயணிக்கின்றார்கள்.
யுத்தகாலத்தைவிட யுத்தம் இல்லாத நல்லாட்சிகாலத்தில்தான் தமிழ்மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டிலே அராஜக அரசியல்,இலஞ்சம்,ஊழல் மோசடிகள்,திருட்டு,ஏமாற்றல்,இனவாதம்,மதவாதம், போதைப்பொருள்,போன்றவற்றை கட்டுப்படுத்தி சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி அவர்கள் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.உலகத்தரப்படுத்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமதுநாட்டை நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியுடன் இனவாதம்,மதவாதம் என்பனவற்றை களைந்து மூவினமக்களும் ஒருதாய் பிள்ளைகள்போல் வாழ்வதையே கருத்திக்கொண்டே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.இவ்வாறான நிலையில் கிடைக்கப்பெற்ற அரசியல் சாணாக்கியத்தை சாதுரியமாகவும்,நுட்பமாகவும் காத்தான்குடி அரசியல் தலைவர்கள் பயன்படுத்தியும், திட்டமிட்டும் தமிழ்மக்களின் கண்களில் மண்ணைத் தூவி தண்ணீர் தொழிற்சாலையை கட்டி வருகின்றார்கள்.குடிநீரை போத்தலில் அடைக்கும் புல்லுமலை தொழிற்சாலையானது வியாபார நோக்குடன் நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை பொருத்தமட்டில் சகோரத்துவ காத்தான்குடி அரசியல் தலைமைத்துவத்துக்கு பெருமையாக இருக்கலாம்.ஆனால் தமிழ்மக்களுக்கு வறுமையாகத்தான் உள்ளது.
நீர்வளத்தைச் சுரண்டி மட்டக்களப்பு மாவட்டத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி,  மத சாயங்கள் பூசப்படக் கூடாது என்பதே இம்மாவட்டத்தில் உள்ள தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இன, மத, மொழி கடந்து நாட்டில் உள்ள அரசியல்தலைவர்கள்,புத்திஜீவிகள்,நல்லிணக்கச் செயற்பாட்டாளர்கள் சகோரத்துவத்துடன் ஒற்றுமைப்பட்டு புல்லுமலை குடிநீர்தொழிற்சாலையை மூடிவிடுவதற்கு கரிசனை செலுத்த வேண்டும்.
றொமன்ஸியா லங்கா பிறைவட் லிமிடட் எனும் நிறுவனமானது புல்லுமலையில் நிலத்தடி நீரை எடுத்து போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்தவிடயம் இப்பிரதேசத்தில் வாழுகின்ற எல்லா மக்களின் கரிசினையையும் ஈர்த்துள்ள ஒன்றாகும்.
கிராமம் சார்ந்த ஒரு பிரதேசத்தில் முக்கிய வளங்களாக மரம், மண், நீர் என்பன இடம்பெறுகின்றன. வனவளம் அழிக்கப்படுவது தொடர்பாக மக்களின் பாதிப்புகள், எதிர்ப்புகள் என்பன உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும் கூட சட்டவிரோதமாக இருப்பினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் உள்ள சிலருடைய அனுசரணையோடு தொடர்ந்தும் அவை நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மண்வளத்திற்கும் இதே நிலைதான்.
நீர்வளம் இது வரை இந்த ஒரு ஆபத்து நிலைக்கு உட்படவில்லை. ஆனால் குறித்த இந்த நிறுவனத்தின் செயற்பாடு இப்பிரதேசத்தின் நீர்வளத்திலும் அபாயக் குறியைக் காட்டுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.
இந்த விடயத்தில் எல்லா மனிதர்களும் ஒரே கருத்தைக் கொண்டவர்களாகவே இருக்க  வேண்டும். இந்த நிறுவனத்தை நடத்துபவர் அல்லது அந்தக் குழுமம் தனிப்பட்ட  நபராக அல்லது குழுமமாகவே கருதப்பட வேண்டும். இதற்கு எந்த விதத்திலும், எந்தப் பக்கத்தில் இருந்தும் இன, மொழி,  மத சாயங்கள் பூசப்படக் கூடாது. இது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும்.
குடிநீர் விநியோகம் என்ற செயற்பாடு அதிகளவான ஊற்றுப்பகுதியில் இருந்து செயற்படுத்துவதுதான் உகந்ததாகும். அங்கிருக்கின்ற ஊற்று வற்றாத ஊற்றாக இருக்கும். ஆனால் தாழ்நிலத்தில் அதாவது சமதரையில் இத்தகைய வாய்ப்பு இல்லை. இந்த விடயத்தை நாங்கள் எழுந்தமானமாகவோ, கற்பனையாகவோ அல்லது இதனை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானது என்ற அடிப்படையிலோ இந்தக் கருத்தைச் சொல்லவில்லை.
இந்தியாவிலே இவ்வாறு நிலத்தடி நீரைப் பாவித்ததன் காரணமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழகம், பஞ்சாப், ஆந்திரா என்பன முறையே 01,02,03 இடங்களில் இருக்கின்றன. 2007ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பின்வரும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது 87 வீதமான கிணறுகளின் ஆழம் அவை அமைக்கப்பட்ட போது இருந்த ஆளத்தை விட குறைந்து காணப்படுகின்றது. இவற்றில் 35 வீதமான கிணறுகளில் 2 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 24 வீதமான கிணறுகளில் 4 மீட்டர் வரை நீரின் அளவு குறைந்துள்ளது. 28 வீதமான கிணறுகளில் 4 மீட்டருக்கு மேல் நீரின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு 77 வீதமான நிலத்தடி நீர்வளம் அழிக்கப்பட்டுள்ளது என ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. இந்த விதத்தில் இந்த நிறுவனமும் இவ்வாறு நிலத்தடி நீரைக் கொண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற போது நாளொன்றுக்கு 20000 லீட்டர் நீர்ப் பயன்பாடு அவர்கள் திட்டத்தில் உள்ளது. இதனை மேற்பார்வை செய்வதற்கான எவ்வித வழிமுறையும் இல்லை. மண் அகழ்வின் போதும் இத்தகைய நிலைமையே பின்பற்றப்படுகின்றது. அனுமதிப்பத்திரங்களில் பல்வேறு விதமான மட்டுப்பாடுகள் இருந்த போதிலும் கூட இவை உதாசீனம் செய்யப்படுகின்றது. இது தொடர்பான முறைப்பாடுகளை உரிய அதிகாரிகள் சரியான முறையில் ஏற்று மேற்பார்வை செய்வதில்லை. இந்த நிலைமையே இந்த நிலத்தடி நீர் பயன்பாட்டிலும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தச் செயற்பட்டின் போது தற்போதே நீர்வளம் குறைவாக உள்ள புல்லுமலைப் பிரதேசம் உடனடியாகப் பாதிக்கப்படுகின்ற அதேவேளை அப்பிரதேச குளங்கள் மற்றும் நீர்வளங்களும் பாதிப்புக்களாகுவதோடு முழு மாவட்டமும் இந்தப் பாதிப்பின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த விடயத்தில் நிலத்தடி நீர்வளம் தொடர்பாக சுற்றுச் சுழல் திணைக்களம் மற்றும் புவிச்சரிதவியல் அளவீடு மற்றும் சுரங்கத் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் துல்லியமாகச் செயற்பட்டுள்ளன என்ற கூறமுடியாதுள்ளது.
இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களின் அதிருப்திகள் ஏற்கனவே பல தடவைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் இது தொடர்பான கண்டங்களைத் தெரிவித்ததோடு குறித்த நிறுவனத்தினரை அழைத்து இதன் பாதிப்புகள் தொடர்பில் விளக்கி இச்செயற்பாட்டை கைவிடுமாறு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தாம் சட்டமுறையில் எல்லா அனுமதிகளையும் பெற்றுள்ளதாகக் கூறிக் கொண்டு குறித்த நிறுவனம் அவர்களது செயற்பாட்டைத் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
அவர்கள் ஒரு தொழில் நிறுவனம் என்ற ரீதியிலே அவர்களது வருமானம் தொடர்பில் சிந்திப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்த வருமானமானது இந்தப்பிரதேசத்தை முற்றிலும் அதன் இயற்கைத் தண்மையில் இருந்து காவு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியது எனகின்ற விடயத்தை இந்த நிறுவனத்தினர் மனங்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே விடப்பட்ட நியாயமான கோரிக்கைகளை அனுமதியைப் பெற்றுவிட்டோம், அரசியல் பலம் இருக்கின்றது என்ற அடிப்படையில் உதாசீனம் செய்வது மனிதத்துவத்திற்கு மாறானதாகும்.

எனவே குறித்த நிறுவனத்தினர் தங்களுடைய செயற்பாட்டை மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் செயற்படுத்துவதே உகந்தது. நீர்வளத்தைச் சுரண்டி இப்பிரதேசத்தை வரட்சி வலயமாக ஆக்குகின்ற செயற்பாட்டை மனிதத்துவப் பார்வையிலோ மதத்துவப் பார்வையிலோ ஏற்றுக் கொள்ள முடியாது.

இதன் விளைவுகள் தொடர்பில் அவர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். அவ்வாறு அவர்கள் தெரிந்து வைத்திருந்தால் அதனை  மேற்கொள்வதற்கு முன்வந்தும் இருக்க மாட்டார்கள் எனவும் நம்புகின்றோம். எனவே தற்போது இதனைக் கௌரவப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாது, தங்கள் மூதலீடு தொடர்பில் அச்சம் கொள்ளாது மனிதாபிமான அடிப்படையில் தங்கள் திட்டத்தை வேறொன்றாக மாற்றி செயற்படுவது சிறப்பு.

இரக்கமற்ற வெனிஸ் நகர வணிகன் தனது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு கடன் பட்டவரின் உடம்பில் இருந்து இறைச்சியை அறுத்தெடுக்க முற்பட்ட செயற்பாடானது மனிதத்துவத்திற்கு மாறானது என்ற ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகன் என்ற ஆங்கில இலக்கியக் கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே நாங்கள் திட்டமிட்ட படியே தான் செய்வோம் என்ற அடம்பிடிக்காமல் இத்திட்டத்தை மாற்றியமைக்க முன்வருவீர்கள் என்றால் இப்பிரதேச மக்களின் வாழ்த்துக்களுக்கு உரித்தாகுவீர்கள்.

இது தொடர்பில் இப்பிரதேச மக்களுடைய ஒட்டுமொத்தக் கருத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் 07ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற ஹர்த்தாலின் நோக்கமாகும்.இன, மத, மொழி கடந்து நாட்டின் அரசியல் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் புல்லுமலை தொழிற்சாலையை மூடிவிடவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களினதும்,அரசியல் தலைவர்களினதும் எண்ணமாகும்.இதனை ஜனாதிபதி அவர்கள் விவேகத்துடன் கவனம் செலுத்தி தமிழ்மக்களின் மனங்களை வெல்வதற்குரிய நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இயற்கை வளத்தைக் காப்பாற்ற ஒவ்வொருவரும் ஒத்துழையுங்கள், குறித்த நிறுவனத்தினர் அவர்களின்  நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுங்கள், உங்கள் மனங்களை மனிதாபிமானம் வெற்றி கொள்ளட்டும்.