102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு

வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் சிலருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சுமார் 102 பேருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லையென பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். இவர்களில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்படக் கூடியவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். எனினும், இவர்கள் அனைவருக்கும் எதிராக 'பீ' அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை படுகொலை செய்த குற்றவாளிகள் போன்றவர்களை எவ்வாறு விடுதலை செய்ய முடியாது என்பதை பிரதமர் எடுத்துக் கூறியிருந்தததாகவும் தெரிவித்தார்.