நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை




மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான முழு நிவாராணங்களையும் உடனடியாக வழங்குமாறு மட்டு. அரசாங்க அதிபருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பல பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடயப்பரப்புக்கு பொறுப்பான அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பு எடுத்துரைத்துள்ளார்.

ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது அவசர தேவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குவதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்துள்ளார்.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமாரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவசரமாக நிவாரணங்களை வழங்குமாறும் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பான அறிக்கையை தனக்கு வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளர்.

அத்துடன், மீட்புப் பணிகளுக்காக பொலிஸ், இராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவிகளை பெருமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி உறுப்பினர்கள் தங்களது பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான தகவல்களை, கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அனுப்பி அந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யுமாறும், அது தொடர்பான அறிக்கைகளை வட்சப் மூலம் அனுப்பி வைக்கும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.