ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்





ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்கள் எவ்வாறு செயற்பட்டு வருகின்ற, செயற்பாட்டு முன்னேற்றம், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,  உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின்  பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் கிராம சக்தி சங்கங்களின் தலைவர், செயலாளர், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 42 கிராம சக்தி மக்கள் சங்கங்கள் கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்காக 10 லட்சம் ரூபா வீதம் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வாழ்வாதாரம், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிராம சக்தி என்ற கிராமத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழித்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்த வேலைத்திம்டத்தின் முக்கியநோக்கமாகும்.

கிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதை நோக்காகக் கொண்டு வாழ்வாதார மேம்படுத்தல், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 2020ஆம் ஆண்டளவில் 5000 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளில் வறுமை ஒழிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக இக் கிராம சக்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.