சோனிகள் தொப்பி பிரட்டிகள் அல்ல போர்க்குணமுடையவர்கள் என்பதனை நிரூபித்த ரவுப் ஹக்கீம்

(முகம்மத் இக்பால் )
அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இடைக்கால தடை ஆணையை வேண்டி மு.கா தலைவர் நீதிமன்றம் சென்றார். இரண்டு நாட்கள் போராட்டத்துடன் பாராளுமன்றத்தை கலைக்கின்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையாணை வழங்கப்பட்டது.

சில நேரங்களில் தடையாணை வழங்கப்படாது இருந்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலையும், நாட்டு நிலைமையும் வேறுவிதமாக இருந்திருக்கும். இவைகள் அத்தனையையும் எதிர்பார்த்துத்தான் ரவுப் ஹக்கீம் அவர்கள் துணிச்சலுடன் களத்தில் இறங்கினார்.

சோனி காக்காமார்கள் என்றால் தொப்பி பிரட்டிகள் என்றும், அதிகாரம் எங்கு உள்ளதோ அந்தப்பக்கம் சென்றுவிடுவார்கள் என்றும், சோனிக்கு கொள்கையே இல்லை என்றும் ஏனைய சமூகத்தின் மத்தியில் தப்பபிப்பிராயங்கள் உள்ளது.

அந்த நிலைமை இம்முறையும் ஏற்பட வாய்ப்புக்கள் இருந்தது. இவ்வாறான தொப்பி பிரட்டி என்ற தப்பபிப்பிராயங்கள் அரசியல்வாதிகளால் ஏற்படுகின்றதே தவிர, மக்களால் அல்ல.

முஸ்லிம் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தங்களது பாராளுமன்ற பலத்தினை அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையிலேயே துணிந்து இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கலம்.

மகிந்த பிரதமரானதும், நாமல் ராஜபக்ச அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே முதலில் தொலைபேசி அழைப்பு விடுத்தார். மறுமுனையில் நாமலின் குரலை கேட்ட சில முஸ்லிம் உறுப்பினர்கள் தொடை நடுங்கினார்கள். 

தங்களுக்கு ஆணை வழங்கிய மக்களின் நிலைப்பாடு என்ன என்று இவர்கள் சற்றும் சிந்திக்கவில்லை.

இந்த நேரத்தில் பசீர் சேகுதாவூத் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இருந்திருந்தால், சில உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு மகிந்தவின் பக்கம் சென்றிருப்பார். அவ்வாறு கூட்டிக்கொண்டு செல்ல பசீர் போன்று யாரும் இல்லாததுதான் சில மு.கா உறுப்பினர்களை தடுத்திருந்தது.

ஒரு சில உறுப்பினர்களினால் பாரிய அழுத்தங்கள் தலைவருக்கு ஏற்படாமலில்லை. சட்டத்தின்முன் போராடி நீதியை பெறலாம் என்ற நம்பிக்கை ரவுப் ஹக்கீமுக்கு இருந்தது. ஆனால் போராட்ட குணம் இல்லாத சிலர், வீண் வம்பு எதற்கு என்றே சிந்தித்தார்கள்.

இந்த போராட்டத்தில் தனது கட்சி உறுப்பினர்களை மட்டுமல்லாது, மாற்றுக் கட்சி முஸ்லிம் உறுப்பினர்களையும் மகிந்தவின் பக்கம் சென்றுவிடாமல் தடுத்து நிறுத்திய பாரிய பணியை ரவுப் ஹக்கீம் அவர்கள் செய்தார். அதில் வெற்றியும் கண்டார்.   

சிலர் மக்களை மடயர்களாக்கிக்கொண்டு ஊடகங்கள் மூலமாக எவ்வளவுதான் வீரம் பேசினாலும் அவர்கள் உள்ளுக்குள் கோழைகள். அதிகாரம் எந்தப்பக்கம் உள்ளதோ அந்தப்பக்கம் குரங்குபோன்று தாவுவார்கள்.

எனவே ராஜபக்சாக்களின் பலம் என்ன என்று தெரிந்திருந்தும் அவர்களிடம் சோரம்போகாமல் சவால் விடுத்தவாறு, சட்டத்தின் முன் போராட களம் இறங்கியதானது மக்களை ஏமாற்றுகின்ற கோளை அரசியல்வாதிகளுக்கு ஓர் படிப்பினையாகும்.

எதிர்காலங்களில் இவ்வாறன கோழைகளை அகற்றிவிட்டு மக்களுக்காக வீரத்துடன் மார்பு நிமிர்த்தி போராடக்கூடிய அரசியல் தலைமைகளை உருவாக்கவேண்டும் என்பதே மக்களின் வேண்டுதலாகும். இதமூலமே சோனிகள் தொப்பி பிரட்டிகள் அல்ல என்பது உறுதிப்படுத்தப்படும்.