6 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு ! நகைகள் பொலிசாரால் மீட்பு ! ஒருவர் கைது

(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை பிரதேசத்தில் நகை கடை வர்த்தகர் ஒருவரின் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 தங்க மோதிரங்களை மறைத்து வைத்த குற்றச் சாட்டின் பேரில் பொற்கொல்லர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று மாலை அன்னமலையை சேர்ந்த 35 வயதுடைய பொற்கொல்லர் ஒருவர் அம்பாரை நகைக்கடைக்கு மோதிரங்களை கொண்டு செல்லும் போது மஜீட்புர சந்தியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் நகை கொள்ளையிடப்பட்டதாக சம்மாந்துறை பொலிஸில் இரவு 10 மணிக்கு முறைப்பாடு செய்ய வந்துள்ளார்.


அவரின் முறைப்பாட்டில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டலில் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி வை.விஜயராஜா உள்ளிட்ட குழுவினர். ( ரத்நாயக்க , லோகேஸ்வரன் , ரதீபன், )
 மேற்கொண்ட விசாரணையில் அடிப்படையில் பொய்யாக முறைப்பாடு செய்யப்பட்ட நபரின் வீட்டில் 6 இலட்சம் ரூபாய் பொறுமதியான 40 தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இதேவேளை குறித்த நபர் 8 வருடங்களாக அம்பாரை நகைக்கடை உரிமையாளாரின் நகைக்கடைக்கு தங்க பிஸ்கட்டுக்களை உருக்கி நகை ஆபரங்கள் செய்து வந்ததாகவும் இவரிடம் 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட் கொடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பொய்யான முறைப்பாடு மற்றும் நம்பிக்கை மோசடி சட்டத்தின் கீழ் பொய்யான முறைப்பாடு செய்த பொற்கொல்லனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.