கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்பியூலன்ஸ்கள் - சுகாதார அமைச்சு



சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 11 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வு இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நாளை மறுதினம் சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை, மீறாவோடை, நிந்தவூர், இறக்காமம், அம்பாறை, மட்டக்களப்பு, பாணம, ஏறாவூர், அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கே இவ்வாறு அம்பியூலன்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, ஏனைய மாகாணங்களுக்கான அம்பியூலன்ஸ் வாகனங்களை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோரின் தலைமையில் கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்த வருடத்துக்குள் மேலும் பல வைத்தியசாலைகளில் காணப்படும் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கான குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.